Wednesday, February 22, 2023

அரிக்கமேடு , பாண்டிச்சேரி

                                    அரிக்கமேடு , இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாண்டிச்சேரி நகருக்கு அருகே அமைந்திருந்து , மறைந்து போன பழமையான துறைமுக நகரமாகும் . புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் அமைந்த நகரமாகும் . தற்போது அமைதியாக காணப்படும் இவ்விடத்தில் தான் கி.மு 200 லிருந்து கி.பி 200 வரை மிகச் சிறப்பான வாணிபம் நடந்துள்ளது . இந்தியாவில் உள்ள அரிய தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களில் இந்நகரமும் ஒன்றாகும் . இங்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இங்கு நகரம் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன . அரியாங்குப்பம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் , வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு வேறுபட்ட மற்றும் தொடர்புடைய பகுதிகள் கொண்டிருந்தது எனவும் , அவற்றில் தெற்கு பகுதி ஒரு தொழில் நகரமாகவும் மக்கள் வாழ்ந்த பகுதியாகவும் , வடக்குப்பகுதி துறைமுகம் சார்ந்த இடமாகவும் இருந்திருக்க கூடும் என்பது அறிஞர்களின் கூற்று . சங்க இலக்கியத்தில் கிரேக்கர்கள் "யவனர்" என்று வழங்கப்பட்டனர் . அதேபோல சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் மருகூர்பாக்கம் இதுவாகவே இருக்கலாம் என்று அறியப்படுகிறது . இதுமட்டும் அல்லாமல் அயல் நாட்டவரின் பயணக் குறிப்புகளில் இருந்தும் இங்கிருந்த துறைமுகத்தை பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது . மிகப் பழமையை வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூலான பெரிப்ளூஸ் மற்றும் தாலமி தனது வரைபடத்தில் குறித்த "பொதுக்கே " என்பதும் இன்றைய புதுச்சேரியை ஆகும் . இந்த துறைமுகத்திலிருந்து ரோம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா , தாய்லாந்து , சீனா மற்றும் அனுராதாபுரம் துறைமுகங்களுடன் கப்பல் மூலம் கடல்வழிப் போக்குவரத்து இருந்துள்ளது. இந்நகரில் இருந்து இந்தியாவின் பிறப்பகுதிகளில் உள்ள பல நகரங்களுக்கு சாலை வழியாகவும் நதிகள் மூலமும் சரக்குகள் கொண்டு செல்லும் போக்குவரத்து இருந்திருக்கிறது . நம் நாட்டில் இருந்து மிளகு, நவமணிகள், மஸ்லின் ,தந்தம், பட்டு ஆகியன ஏற்றுமதி ஆயின . ரோமில் இருந்து பவளம் , கண்ணாடி விளக்குகள் , பித்தளை , மதுச்சாடிகள் , மது வகைகள் முதலான இறக்குமதி ஆயின . ரோமின் பேரரசர் அகஸ்டஸின் காலமான கி.மு 23 லிருந்து கி.பி 23 வரை பழக்கத்தில் இருந்த அகஸ்டஸ் தலை பொரித்த நாணயங்கள் இங்கு கிடைக்கின்றன . இவர் காலத்தில் கிரேக்க ரோமானிய வணிகர்கள் வந்து தங்கி ஏற்றுமதி , இறக்குமதி செய்தனர் என்பதை அறிய முடிகிறது .

அரிக்கமேட்டில் தொல்லியல் ஆய்வுகள் :
                           1768-71 இல் பாண்டிச்சேரிக்கு விஜயம் செய்த பிரெஞ்சு வானியலாளர் Guillaume Le Gentil என்பவரின் பயணக் குறிப்பில் அரிக்கமேடு என்ற இடம் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மண்ணால் கட்டப்பட்ட சுமார் 10அடி உயரச் சுவர்கள் கொண்ட பெரிய தொட்டிகள் இருந்ததை அவர் பதிவு செய்துள்ளார், ஆற்றின் கரையோரத்தில் இருந்த சுவர்களின் அடையாளங்களை கொண்டு அவை முதலில் குறைந்தது 20 அடி ஆழமும் நான்கு அடி அகலமும் இருந்திருக்கும் என்பது அவரின் கருத்து . 1941 ஆம் ஆண்டில், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் G . Jouveau Dubrevil இவ்விடத்தை பார்வையிட்டு (Periplus of the Erythraean Sea)  பெரிப்பிளஸில் குறிப்பிடப்படும் பண்டைய " பொடுகே " தான் இந்நகரம் என்று கண்டறிந்தார் . இந்த செய்தி பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது, அவர்கள் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தனர் . ஆனால் அவை அறிவியல் பூர்வமான அகழ்வாராய்ச்சி இல்லாததால் , மேலும் 1945 ஆம் ஆண்டு Sir Mortimer Wheeler இவ்விடத்தில்   அறிவியல் முறையில் அகழ்வாராய்ச்சி செய்தார் . அவர் அந்த இடத்தை அரிக்கமேடு என்று அழைத்தார், உள்ளூர் கிராம மக்கள் பயன்படுத்திய பெயர், அரிக்கும் மலை.   வீலர் அகழ்வாராய்ச்சியில் இங்கு ஒரு துறைமுக நகரம் இருந்ததை கண்டறிந்தார் . இந்த நகரம் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு வேறுபட்ட மற்றும் தொடர்புடைய பகுதிகளைக் கொண்டிருந்தது என்றும் , அங்கு முறையே யவனர்கள் மற்றும் பூர்வீகவாசிகள் குடியிருந்ததையும் கண்டறிந்தார் . நகரின் தெற்குப் பகுதி ஒரு தொழில் நகரமாக இருந்தாலும், கடலுக்கு அருகில் இருக்கும் நகரத்தின் வடக்குப் பகுதி துறைமுகம் சார்ந்ததாக இருப்பதாக வீலர் வாதிட்டார். இவரின் அகழ்வாராய்ச்சியில் தானிய கிடங்குகள், வளையக் கிணறுகள் மற்றும் தொட்டிகள் போன்ற கட்டமைப்புகளுடன் நகரத்தின் அமைப்பை வெளிப்படுத்தியது. Arretine ware, Red Table ware, Amphora துண்டுகள், மணிகள், மற்றும் உலோகப் பொருட்கள் போன்ற மத்திய தரைக்கடல் மட்பாண்டங்கள் போன்றவை இங்கு கிடைத்தன , அரிக்கமேடு நகரம் ரோம் நகருடன் வர்த்தக தொடர்பை கொண்டிருந்ததை மீண்டும் நிறுவியது,

                           கிரேக்க ரோமானியர்களின் வருகைக்கு முன்னர் அரிக்கமேடு நகரம் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்ததாகவும் , இந்த நகரம் யவனர் காலத்தில் ஒரு தொழில்துறை மற்றும் துறைமுக நகரமாக மாறியது என்றும் கருதினார் . வீலரின் கூற்றுப்படி, அரிக்கமேடு நகரத்தின் வரலாறு கி.மு 100 - கி.பி 100 என உறுதிப்படுத்தினார் .


1949 இல் அரிக்கமேடு பற்றிய வீலர்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் Jean Marie Casal இந்த இடத்தை விரிவாக அகழாய்வு செய்தார். காசலின் அகழ்வாராய்ச்சியில் அரிக்கமேடு மற்றும் ரோம் இடையே வர்த்தக காலம் கி.பி 200 என நிறுவியது. அரிக்கமேட்டில் மத்திய தரைக்கடல் வணிகர்கள் வருவதற்கு முன்பே தென்பகுதியில் கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகள் இருந்ததையும் , இங்கு பெருங்கற்கால சின்னங்கள் இருந்ததையும் அவர் கவனித்தார். பிற்காலத்தில் சோழர், பல்லவர் மற்றும் விஜயநகர ஆட்சியின் போது ரோமானியர்கள் வெளியேறிய பின்னரும் இந்நகரம் உயிர் பிழைத்திருந்தது. காசல் அகழ்வாராய்ச்சியின் போது இடைக்கால மட்பாண்டங்கள், நாணயங்கள் மற்றும் பிற கலைப்பொருட்களும் கிடைத்துள்ளது .

இந்த மறக்கப்பட்ட நகரமான அரிக்கமேடு மீது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் தங்கள் கவனத்தைத் திருப்புவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆனது. 1989-1992 இல் பேராசிரியர் விமலா பாக்லே மற்றும் அவரது குழுவினர் இந்த இடத்தை விரிவாக அகழாய்வு செய்தனர். அவர்கள் பின்வரும் முடிவுகளை கூறினர் .

தென்னிந்தியாவின் இரும்புக் கால (பெருங்கற்கால) பண்பாடுகளுடன் தொடர்புடைய மட்பாண்டங்கள் கிடைத்ததன் மூலம் , கிமு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து மக்கள் தென் பகுதிக்கு குடியேறி இருக்கலாம் என்றும் , குடியேறியவர்கள் மேற்கத்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்த காலத்திலும் அங்கு தொடர்ந்து வாழ்ந்தனர் என்றும் அது கிமு 50 முதல் கிபி 50 வரையான காலம் என்றும் தெரிவித்தனர். வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் இரண்டு வெவ்வேறு மக்கள் வாழ்ந்ததை இங்கு கிடைக்கும் இரண்டு வகை மட்பாண்டங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம் . இரண்டு பகுதிகளிலும் முதன்மையாக மத்தியதரைக் கடலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அதாவது ஆம்போரா ஒயின்கள், ஆலிவ் எண்ணெய், பீங்கான் எண்ணெய் விளக்குகள் போன்றவை இருந்தன, மேலும் இவைகளை வடக்குத் பகுதியில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தினர் என்றும் கண்டறிந்தனர் . துறைமுகத்திற்கு அருகில் வடக்குத் துறையில் குடியிருப்புகள் இருந்ததையும் , இடைக்கால சோழர் மற்றும் பிற்காலங்களில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு வணிகத்திற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்தன .
இதற்கு பின் சுமார் 18 ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தபோது உள்ளூர் பிரெஞ்சு அரசாங்கத்தால் Jesuits ஜேசுயிட்ஸ் என்ற பாதிரியார்களுக்காக ஒரு மிஷன் ஹவுஸ் கட்டப்பட்டபோது , இங்கு மீண்டும் குடியேற்றம் நிகழ்ந்தது . ஜேசுயிட்கள் கிட்டத்தட்ட இரூபது ஆண்டுகள் இந்த குடியிருப்பை பயன்படுத்தினர், அவருக்கு பின்னர் மீண்டும் அங்கு குடியிருப்பு நிகழவில்லை . இதனால் புராதன நகரம் இருந்த இடம் வெறிச்சோடி மறந்து போனது. உள்ளூர் மக்கள் பல்வேறு கட்டுமானங்களுக்கு இவ்விடத்தில் இருந்த ரோமன் செங்கற்களைப் பயன்படுத்த தொடங்கினர் .                                                                                                     2004 ஆம் ஆண்டில், புதுச்சேரி அரசு தனியார் உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி, பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், தேசிய நினைவுச்சின்னமாகவும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு (ASI ) ஒப்படைத்தது.தற்போது இந்திய தொல்பொருள் துறை பராமரிக்கும் இவ்விடத்தில் 18ம் நூற்றாண்டு பிரஞ்சு கட்டுமானம் மட்டுமே உள்ளது .     
v











                                                               





No comments:

Post a Comment