Tuesday, December 8, 2020

போடிநாயக்கனூர் அரண்மனை சிதம்பரம் கோயில் சுவர் ஓவியங்கள்

 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கம் வெகு காலமாக இந்தியாவெங்கும் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெடி வெடிக்கும் நிகழ்வானது தீபாவளிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு மகிழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் வெடிப்பது தமிழகத்தின் ஒரு மரபாகவே இருந்து வருகிறது. கொண்டாட்ட நிகழ்வின் போது வெடிக்கும் பட்டாசுகள் பற்றிய ஓவியங்களை சில இடங்களில் காணமுடிகிறது . இது அன்றைய காலகட்டத்தில் எது மாதிரியான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன ,எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நமக்கு காட்சிப்படுத்துகிறது .

அவற்றில் ஒன்று போடிநாயக்கனூர்  அரண்மனை மற்றொன்று  சிதம்பரம் கோயில் .


1) போடிநாயக்கனூர் அரண்மனை : 

                      தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனை வளாகத்தில் "லட்சுமி விலாஸ்" என்ற சித்திர மண்டபத்தில் ராமாயண ஓவிய தொகுப்புக்கள் வரையப்பட்டுள்ளன .இந்த ஓவியங்களில் ராமாயணம் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ள காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அதில் ராமன்சீதையின் திருமணத்தின்போது சீதையை பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லும் நிகழ்வினை  ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. அதில் அந்த பல்லக்கின் முன்னால் சிலர் வானவேடிக்கை நடத்துகின்றனர். . இந்த ஓவியங்கள் யாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  போடி பங்காரு திருமலை நாயக்கர் என்ற மன்னரின் காலத்தில் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.


2)சிதம்பரம் கோயில்

                     சிதம்பரம்  நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மன் சன்னதியின் முன் அமைந்த மகாமண்டபம் வண்ணமயமான ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் சைவசமயம் சார்ந்த பாடல்களை மையப்படுத்தி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள ஓவியத் தொகுதி ஒன்றில் வானவேடிக்கை விடும் காட்சி ஒன்று காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் ஆட்சி காலத்தில்  தமிழக ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அங்குள்ள ஓவிய தொகுதிகளில் காட்சிகளின் விளக்கம் வட்டார தமிழ் வழக்கப்படி எழுதப்பட்டுள்ளது.