Tuesday, February 9, 2021

ஆறுநாட்டார்மலை , கரூர்

 கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் எனும் ஊரில் உள்ளது ஆறுநாட்டார்மலை. இம்மலை உச்சியில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இதே மலையின் மேல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளிலும் குகையின் விளிம்பிகளிலும்தான் கரூரின் தொன்மைக் கல்வெட்டுக்கள் உள்ளன. 

கல்வெட்டு 1

  ......தா அ ம ண ண ன யா ற றூ செ ங கா 

ய ப ன உ றை ய

கோ ஆ த ன செ ல லி ரு ம பொ றை ம க ன 

பெ ரு ங க டு ங கோ ன ம க ன.ன ங்

க டு ங கோ ள ங கோ ஆ சி அ று த த க ல


மேற்கண்ட இந்த கல்வெட்டானது மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. 

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ, இவரது மகன் இளங்கடுங்கோ என்பவர் இந்த படுகையை அமைத்துக் கொடுத்ததாக செய்தி. 

சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இம்மூன்று சேர அரசர்களையும் இங்குள்ள  கல்வெட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு. 

கல்வெட்டு ; 2

யா ற றூ செ ங கா ய ப ன ..ற றி ட

டா ட டா ன ம 

என்ற கல்வெட்டு வாசகத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. 


மேலும் யாற்றூரைச் (தற்போதைய ஆத்தூராக இருக்கலாம்) சேர்ந்த  செங்காயபன் என்பவர் சமணத் துறவியாக மாறியதன் பொருட்டு அவருக்கு செய்து கொடுத்த படுக்கை இதுவாகும். மூத்த அமணன் என்று குறிப்பிடப்படுவதால் அங்கிருக்கும் துறவிகளுக்கு தலைமை துறவியாக இருக்கலாம்.

மேலும் இவரது படுக்கையை குறிக்கும் வகையில் துறவியின் பெயர் படுக்கையிலும் உள்ளது.


கல்வெட்டு 3

(சு) ண ண வா ண ணி க ன

வே ள ஆ த ன அ தி ட டா ன ம


மேற்குறிப்பிட்ட இந்த கல்வெட்டு வாசகமும் ஒரு துறவியின் படுக்கையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த துறவி ஒரு சுண்ணாம்பு வணிகராக இருந்தவர் என்பதையும், கரூரில் சுண்ணாம்பு வாணிகம் நடந்திருந்தமையும் இந்த கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.


கல்வெட்டு 4

கருஊர பொன வாணிகன

நநதி அதிடடானம


இந்த கல்வெட்டானது கரூரைச் சார்ந்த பொன் வாணிகன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளமையால் கரூரில் பொன் வேலைப்பாடுகளும் பொன் சார்ந்த வாணிகமும் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.


கல்வெட்டு 5

ந ம பி ஊ ர அ பி ட ன கு று ம ம க ள

கீ ர ன னே றி செ யி பி த ப ளி


மேற்கண்ட இந்த கல்வெட்டில் வரும் பிட்டன் குறுமகள் என்ற வாசகத்தின் மூலம் பெண்துறவிகளும் இங்கு இருந்தமையை அறிய முடிகிறது.


மேற்கண்ட இந்த கல்வெட்டுக்கள் யாவும் தொன்மைத்தமிழ் பிராமி எழுத்துக்களால் கிமு2ம் நூற்றாண்டு முதல் கிபி2ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவை என்று அறிஞர்களால் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சேரநாட்டின் தலைநகராக விளங்கிய வஞ்சிமாநகர் என்றழைக்கப்படும் கரூரின் தொன்மையையும் சிறப்பையும் அறியலாம்.










கற்திட்டை நம்பியூர் மலையபாளையம்

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எலும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.

                                 ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் என்ற ஊரின் அருகில் மலையபாளையத்தில்  பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டை காணப்படுகிறது .

தற்போது ஒரே ஒரு கற்திட்டை  நல்ல நிலையில் உள்ளது . 

                     வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இவற்றை எவ்வாறு மேலே தூக்கி தூக்கிவைத்திருப்பர் என்பது வியப்பே. கற்கால நாகரீகத்தைப் பறைசாற்றும் இந்த சின்னங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்.







விஜயமங்கலம் விஜயபுரிஅம்மன் , குறுப்புநாடு

ஈரோடு மாவட்டம் , பெருந்துறைக்கு அருகே உள்ள ஊர் விஜயமங்கலம் . இவ்வூர் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றான குறுப்பு நாட்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும் . 32 ஊர்களை கொண்ட நாடு குறுப்பு நாடு . அவற்றின் தலைநகரம் விஜயமங்கலம்.  இங்கு உள்ள விஜயபுரி அம்மன் ஆலயம் பழமையானது . ஊரின் பெயரிலேயே அம்மன் அமைந்தது இதன் சிறப்பு . இக்கோயிலில்  மகாபாரத கதையை    விளக்கும் சிற்பம்  உள்ளது . 

பஞ்சபாண்டவர்கள்  ஓராண்டு காலம் மறைந்து வாழ்த்த பகுதி தாராபுரம் என்று கூறப்படுகிறது . அப்போது அர்ஜுனன் தன்னிடம் இருந்த வில்லை விஜயபுரி அம்மனிடம் அடைக்கலப்படுத்தி வைத்திருந்ததாக கொங்கு மண்டல சதங்கம் கூறுகிறது . 


கொங்கு மண்டல சதங்கம்,

"  துளைமணி ரத்ன மகுடா சலத்தைவர் சூதில்நொந்தே

கிளையினை நீங்கி வனவாசம் செய்கையில் கீர்த்திபெற்ற 

விளைவயல் சூழ்மங்கைப் பத்தினிக் கோட்டத்தில் வில்விசயன்

வளைவில் அடைக்கலம் வைத்தது வும்கொங்கு மண்டலமே "


இவ்வாலயத்தின் கிழக்கு சுவற்றில் அர்ஜுனன் தேரில் வருவது போலவும் தனது வில்லை அம்மனிடம் அடைக்கலம் கொடுப்பது போலவும் சிற்பங்கள் உள்ளன . 

இக்கோயிலின் புணரமைப்பின் போது முன்மண்டபத்தில் இருந்த சிம்மத்தூண்கள் அகற்றப்பட்டு கோயிலுக்கு வெளியே வைக்கப்படுள்ளது . அதனுடன் மிகப்பழமையான சில நடுகற்கள் உள்ளன . அவற்றில் மூன்று நவகண்ட சிற்பங்கள் . மக்கள் , நாடு அல்லது அரசன் நலனுக்காக தன்னை தாமே கழுத்தை அறுத்து கொண்டு பலியிட்டு கொண்டு வீரமரணம் அடைவது நவகண்டம் ஆகும் .