Sunday, September 17, 2023

KHAB BRIDGE ,SPITI VALLEY , HIMACHAL PRADESH

 காப் என்பது சட்லஜ் நதியின் கரையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் . இமயமலையின் இரண்டு பெரும் ஆறுகளான சட்லெஜ் மற்றும் ஸ்பிட்டி ஆறுகள் ஒன்றோடு ஒன்று இணையம் இடம் தான் காப் . சட்லெஜ் ஆறு திபெத்திய மானசரோவரில் உள்ள ஏரியில் உற்பத்தியாகி ஏராளமான இமயமலை பள்ளத்தாக்குகளை கடந்து பஞ்சாப் வரை பாய்கிறது . பஞ்சாபில் பாயும் ஐந்து நதிகளில் மிகப்பெரிய நதி சட்லெஜ் . இதில் உற்பத்தி செய்யும் மின்சாரம் வடஇந்தியா தொழிற்சாலைகளின்  முக்கிய ஆதாரமாக திகழ்கிறது .  

 இமயமலையின் பனிப்பாறைகள் உருகி ஸ்பீட்டி  நதியாக பாய்கிறது . இமயமலை மக்களின் குடியிருப்புகள் எல்லாம் இந்த ஸ்பீட்டி நதியை ஒட்டியே அமைந்திருக்கிறது . இந்த இரு பெரும் நதிகள் சங்கமம் ஆகும்பள்ளத்தாக்கின்  மேலே அமைக்கப்பட்டுள்ள பாலம் தான் காஃ பாலம் (Khab Bridge ) . இந்த இரு நதிகளும் பெரிய மலைகளுக்கு நடுவே உள்ள பள்ளத்தாக்கில் சங்கமம் ஆகிறது அதனால் இரு மலைகளுக்கு நடுவே நடக்கும் இந்த சங்கமத்தை காண இரண்டு கண்கள் போதாது . இந்தப்பாலம் இரும்பினால் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளது . இங்கு நின்று புகைப்படம் எடுக்காத வண்டிகளே இல்லை . இதற்காண பயண சாலை பாதைகளும் மலைகளை குடைந்தே அமைத்திருப்பதை காண முடிகிறது . அமைதியான அழகான இடத்தில்  இரு நதிகளின் சங்கமத்தை வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும் .











KALPA , SPITIVALLEY , HIMACHALPRADESH

 சிம்லாவில் இருந்து காசா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 16 km தொலைவில் அமைந்துள்ளது கால்பா என்னும் சிறிய நகரம் . இது சட்லஜ் நதியின் கரையில்  அமைந்துள்ளது . இமயமலையின் சிகரங்களில் ஒன்றான கின்னார் கைலாஷ் என்னும் சிகரத்தை இங்கிருந்து எளிதாக காண முடியும் . இந்த சிகரத்தில் உள்ள ஒரு மலைப்பாறை இந்து கடவுளான சிவலிங்கத்தை போன்று காட்சியளிப்பதால் இச்சிகரத்திற்கு கைலாஷ் என்று பெயர் .  பணியால் மூடப்பட்ட இந்த மலை சூரிய அஸ்தமனத்தின் போது  சூரிய ஒளிபட்டு தங்கம் போல் மின்னுவதை நாம் காண முடிகிறது . இங்கும் ஓரளவு தெளிவான வானம் இரவு நேரத்தில் இருப்பதால் இங்கிருந்து பால்வீதியை காண முடிகிறது . இந்தியாவின் முதல்   வாக்காளராக ஷியாம் சரண் சுகி கால்பாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .









SPITIVALLEY , HIMACHALPRADESH

SPITIVALLEY
HIMACHALPRADESH

ஸ்பிட்டி என்பது இமாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு குளிர் பாலைவன மலையாகும்.  ஸ்பிட்டி என்றால் "நடு நிலம்" என்று பொருள்  ஆதாவது இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவே உள்ள நிலப்பரப்பு என்ற பொருளில் கூறப்படுகிறது . இந்த நிலப்பரப்பில் அமைத்திருக்கும் மிகப்பெரிய  பள்ளத்தாக்கு தான் " ஸ்பிட்டி பள்ளதாக்கு " . இமயமலை பனிப்பாறைகள் உருகி பள்ளத்தாக்கின்  வழியே   "ஸ்பிட்டி  நதியாக பாய்கிறது . எனவே  மக்களின் குடியிருப்புகளும் கிராமங்களும் இந்த நதியை சுற்றியே அமைத்துள்ளது . நாம்  செல்லும் பாதையெங்கும் இந்த ஸ்பீட்டி நதி நம் கூடவே பயணிப்பதை காணலாம் .
    கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் இமயமலைச் சாரலில்  அமைந்திருக்கும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, சாலைப் பயணத்திற்கான ஒரு அற்புத இடமாகும் .  உலகின் மிக ஆபத்தான சாலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சாலையில்   நகரத்தின் சலசலப்புகள் இன்றி ,  பனிப்பாறை  மலைகளுக்கு நடுவே வளைந்து வளைந்து செல்லும் சாலைகளின் ஊடே   செல்வது வெறும் பயணம் மட்டுமல்ல, நம் மனதையும் ஆன்மாவையும் மேம்படுத்தக்கூடிய ஒரு அழகான அனுபவம். பாதையின் ஒரு புறம் மிக  ஆழமான பள்ளத்தாக்கு மறுபுறம் கரடு முரடான மலையில் இருந்து உருண்டு விழும் பாறைகள் என  செல்லும் பாதைஎங்கும் திகில் அனுபவங்கள் . இவ்வளவு ஆபத்தான் பாதைகளுக்கு நடுவே நம்மை ஆசுவாசப்படுத்த சிறு சிறு கிராமங்கள் , பழமையான பௌத்த மடங்கள் , வண்ணமயமான புதிய பௌத்த மடங்கள் , ஆப்பிள் , செர்ரி , ஆப்ரிக்கோட் தோட்டங்கள் , தொங்கு பாலங்கள் , நம் கூடவே பயணிக்கும் ஸ்பிட்டி  ஆறு , ஆங்காங்கே பறக்கும் வண்ணநிற பிராத்தனை கொடிகள் என பகலில் நாம் ரசிக்கும் காட்சிகள் . பகலில் மட்டும் அல்ல இரவிலும் இங்கு நாம் காணும் தெளிவான  தூசுகள் அற்ற வானம் , பால்வீதியின் காட்சிகள் , நட்சத்திரங்கள் நம்மை உற்சாகமூட்டுகின்றன . நகரவாசிகளான நாம் வளிமண்டலத்தில்   தூசுகள் ஒளிகள் இடையூறு இன்றி நட்சத்திரங்களை காண்பது என்பது அரிதான ஒன்றாகும் . ஆனால்  இங்கு நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை ஒன்றாக காண்பது  மட்டும்மின்றி பால்வீதியை புகைப்படம் எடுப்பது , ஷூட்டிங்  ஸ்டார் பார்ப்பது என்பது மிக எளிதான ஒன்றாகும் . வானிலை புகைப்படம் எடுப்பதற்கு  இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும் .
 இயற்கை ரசிகர்களுக்கும் , சாகச விரும்பிகளுக்கும் , பைக் பயண பிரியர்களுக்கும் , பேக் பேக்கர்களுக்கும் இந்த இடம் ஒரு சொர்க்கபூமி . கடுமையான காலநிலையில் வாழும் இந்த மக்கள் நம்மை அரவணைப்புடன் புன்னகையுடன் வரவேற்பதை காண்பது ஆச்சர்யமாக இருந்தது .வாழ்க்கையின் மறக்க முடியா பயணங்களில் இதுவும் ஒன்றாகும் .