Saturday, December 5, 2020

இராமநாதபுரம் அரண்மனை


இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது திருப்புல்லாணி அரண்மனை.   இந்த அரண்மனை  "இருபத்தோரு அறை அரண்மனை " என்று அழைக்கப்படுகிறது . 

சேதுபதி சீமையை ,கி.பி 1676 - 1710 ஆம் ஆண்டு வரை  ஆண்ட ரகுநாத கிழவன் சேதுபதியின் அந்தப்புர அரண்மனை இது  . சேதுபதி மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்த அரண்மனை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறது  . தற்போது பாழடைந்த நிலையில் காட்சி தரும் இந்த அரண்மனை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் உலவுகின்றன. 

இந்த அரண்மனையை கட்டிய மன்னருக்கு 21 மனைவிகள் இருந்ததாகவும் அதனாலேயே இந்த அரண்மனையில் 21 அறைகள் வைத்து மன்னர் கட்டியதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள் . இந்த அரண்மனை கட்ட சுண்ணாம்பு ,கடுக்காய் ,வில்வம் பழம் மற்றும் பச்சிளம் தாய்மார்களின் தாய்ப்பாலை கொண்டு கட்டியதாகவும் கதைகள் உலவுகின்றன  . தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் இந்த அரண்மனை காட்சியளிக்கிறது.









ஈரோடு அந்தியூர் தேவர்மலை நடுகல்

 மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியும் ஒன்றாகும் . அங்கு உள்ள மலையில் தேவர் மலை என்ற மலைக்கிராமம் அமைந்து உள்ளது . அந்த சிறு கிராமத்தில் பந்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் பந்தீஸ்வர் மற்றும் வீரபத்திரருக்கு சிறப்பான வழிபாட்டு  நடக்கிறது . இக்கோயிலில் உள்ள  ஒரு சிறிய பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது . 

இந்த கோவிலுக்கு வெளியே மூன்று நிலையில் நடுகல் ஒன்று உள்ளது. மூன்றுநிலை நடுகல்லில் கீழிருந்து முதல் நிலையில் நடுவில் வாளுடன் வீரன் ஒருவன் உள்ளார். அவரது இருபுறமும் இரு மனைவியர்கள்  உள்ளனர், கையில் மதுக்குடுவையுடன் இருப்பதானால் சதியேறியதாகக் கருதலாம். இரண்டாம் நிலையில் சொர்க்கம் செல்லும் காட்சியும் மூன்றாம் நிலையில் நந்தியுடன் லிங்கமும் அதற்கு பூசை செய்பரும் காட்டப்பட்டுள்ளனர்.

எனவே இதனை நாம் வீரனுடன் உயிர்நீத்த  சதிக்கல்லாக கருதலாம். மூன்றுநிலையும் கைலாசமும் உள்ளதால் இதனை லிங்காயத்து இன மக்களின் நடுகல்லாக கருத வாய்ப்புள்ளது.













பரஞ்சேர்வழி / பரஞ்சேர்பள்ளி

 கொங்கு நாட்டின் உட்பிரிவு நாடுகளில் ஒன்றான காங்கயநாட்டில் உள்ளது பரஞ்சேர்வழி. இவ்வூர் பரஞ்சேர் பள்ளி (பரஞ்சேர்+பள்ளி)என்று சமணம் தொடர்புடையதாகவும், இப்பெயர் மருவி தற்போது பரஞ்சேர்வழி (பரம்+சேர்+வழி) சைவம் தொடர்புடையதாகவும் இருவேறு கருத்துக்கள் உண்டு. 


 சமணர்கள் முதலில் கொங்கு நாடு வந்ததை "பொன்னாடதேசம்" வந்து பின் மற்ற பகுதிகளுக்குச் சென்றதாக குறிப்பிடுகின்றனர் . கொங்குதேசம் முழுவதிலும் சமணம் பரவியிருந்தமைக்கு பல உதாரணங்கள் உண்டு. பரஞ்சேர்பள்ளி என்ற ஊரின் பெயரைக் கொண்டு இங்கு சமணப்பள்ளி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில்  இங்கு  சமண தீர்த்தங்கரர் சிற்பம்  ஒன்று உள்ளது.


 இந்த சமண தீர்த்தங்கரரின் சிற்பமானது அம்மன் கோயிலுக்கு அருகில்  சாலை ஓரத்தில் உள்ளது . இந்த அழகிய தீர்த்தங்கரர் தலைக்கு மேலாக முக்குடையுடனும் , இருபுறமும் கரண்ட மகுடத்துடன் கவரி வீசும் ஆடவர்களுடன் காட்சி தருகிறார் . இந்த சிலை 10 ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருதுகின்றனர் . 


மேலும் இந்த ஊரில் சிறப்பான  மத்யபுரீஸ்வர் என்றழைக்கப்படும் சிவாலயம் ஒன்று உள்ளது .  கி.பி 1261ம் ஆண்டு கொங்கு சோழரான இரண்டாம் விக்கிரம சோழன் கல்வெட்டு ஒன்று கோவில் கிணற்றுக்கு அருகே உள்ள கல்லில் பதிக்கப்பட்டுள்ளது . இக்கல்வெட்டில்  சமூகம் மற்றும் திருவிழா பற்றி ஆய்வு செய்ய பல செய்திகள் உள்ளன . கரைநாடு , அடிக்கீழ்தளம் பதினெண் பூமி மாகேஸ்வரர்களும் சேர்ந்து ஊர் மன்றுபிச்சை அளித்த செய்தியும் உள்ளது . பரஞ்சேர்பள்ளி இறைவனுக்கு பரஞ்சேரபள்ளிபிடாகையைக் கொடையாக அளித்த செய்தும் உள்ளது .


ஆக கொங்குநாட்டில் இவ்வூர் இருவேறு மதங்களை ஒன்றினைத்து சிறப்புற விளங்கியதை அறிய முடிகிறது.