Friday, February 26, 2021

டணாய்க்கன்கோட்டை பவானி


கொங்கு நாட்டின் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாக விளங்கும் பவானி ஆறும் மோயாறு ஆறும் கூடும் இடத்தில் உள்ளது தான்  தனாயக்கன் கோட்டை இதுவே மருவி டணாய்க்கன் கோட்டை ஆனது .

              கொங்கு நாட்டை ஆண்ட ஒய்சாளர்களின் கடைசி மன்னன் மூன்றாம் வீர வல்லாளத் தேவன் ( கி.பி 1292 - கி.பி 1311) .இவன் கொங்கு நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான் . அவன் சேனை தலைவனான பெருமாள் தண்டனாயக்கனுக்கு அவனுடைய வீரத்தையும் விசுவாசத்தையும்  பாராட்டி பரிசாக கொங்கு நாட்டை கொடுத்தான் . தண்டநாயக்கன் இங்கு கோட்டை அமைத்தான் . இவன் இங்கு கோட்டை அமைப்பதற்கு முன்பாகவே இங்கு சோமேஸ்வர மங்களாம்பிகை கோயிலும் கோட்டையும் இருந்ததாக கல்வெட்டு கூறுகிறது . இந்த கோயிலின் முற்கால பெயர் தான் தோன்றீஸ்வரமுடையார் கோயில் என்றும் இவ்வூருக்கு துரவலூர் என்றும் இங்குள்ள முற்கால கோட்டைக்கு நீலகிரி சாதாரணன் கோட்டை என்றும் அழைக்கப்பட்டது என்ற விபரம் செதுக்கப்பட்டுள்ளது . 


மற்றொரு கல்வெட்டு வீரவல்லாளன் 3 ( கி.பி.1292 - கி.பி1341) பற்றியும் மாதப்ப சிங்கய்ய தணாய்க்கன் என்பவன் இரண்டு ஊர்களை கோயிலுக்கு கொடை ஆக கொடுத்த விவரம் பற்றியும் கூறப்பட்டுள்ளது . இவன் ஆட்சி காலத்தில் முகலாயர்கள் இங்கு படையெடுத்து கொங்கு நாட்டை பிடித்தனர்.அதன் போரின் போது இந்த கோட்டையும் சேதப்படுத்தப்பட்டது . மீண்டும் ஒய்சாலர்கள் மொகலயர்களை வென்று இந்த கோட்டையைக் கைப்பற்றி செப்பனிட்டனர் . 


பின்பு அலாவுதீன் கில்ஜீயின் படை தளபதியான மாலிக்காபூர் ஒய்சாலர்களை வென்று டணாய்க்கன் கோட்டையை கைப்பற்றினான். அதன் பிறகு இக்கோட்டை வெகுநாள் பரமரிப்பு இல்லாமல் இருந்தது. 


ஒய்சாலர்களின் வீழ்ச்சிக்கு பிறகு ராயர்கள் ஆட்சியில் , ராயர்கள் நேரடி ஆட்சி செய்ய இயலாது நாயக்கர்களை  நியமித்து ஆட்சி செய்தனர் . திருமலை நாயக்கர் காலத்தில் இக்கோட்டை மீண்டும்  பழுது பார்க்கப்பட்டது .


இக்கோட்டை இவ்வளவு இடற்பாடுகளுக்கு இடையிலும் நிலைத்து நிற்க காரணம் இக்கோட்டை ஆனது பெருவழி பாதையில் அமைந்தது தான் காரணம்  . கேரளாவில் இருந்து கர்நாடக செல்லும் மூன்றாவது பெருவழி மோயாற்று கரைகளின் வழியாக சென்று மைசூரை அடைகிறது . இவ்வழி மேட்டுப்பாளையம் , டணாய்க்கன் கோட்டை , தெங்குமராட்டா, தாளவாடி ,சாம்ராஜ்நகர் வழியாக மைசூரை அடைகிறது . 

 இப்பெருவழியில் அமைந்த இக்கோட்டையை  பிற்காலத்தில் திப்புசுல்தான் பயன்படுத்தியதோடு அல்லாமல் இப்பெருவழியே  புதுப்பித்ததால் சுல்தான் ரோடு என்றும் குறிப்பிடப்படுகிறது . திப்பு வீழ்ச்சிக்கு பின் கொங்குநாடு கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது . அதன்பின் இக்கோட்டை பராமரிப்பு இன்றி போயி்ற்று . 


1947 ல் பவானி சாகர் அணை கட்டப்பட்டதால் இந்த கோட்டை நீரில் மூழ்கியது . இங்கு இருந்த சிலைகளை அப்புறப்படுத்தி பவானி சாகர் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது . இது தற்போது அணையில் நீர் இல்லாத காலத்தில் சென்றால் பார்க்க முடியும் .












ஏரிகல்வெட்டு

 பவானி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஏரிகல்வெட்டில் தகவல்


பவானி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி இருந்தற்கான சான்று கல்வெட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஈரோடு மாவட்டம், பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள ஓடைக்கு அருகில் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஏரி இருந்தது கல்வெட்டு மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளா்கள் புலவா் செ.ராசு, சக்திபிரகாஷ், வேலுதரன் ஆகியோா் இந்தக் கல்வெட்டு தொடா்பாக ஆய்வு நடத்தினா். அப்போது, இது கொங்கு மண்டலத்தின் மிகவும் பழமையான ஏரி என்பது தெரியவந்தது.


இதுகுறித்து, புலவா் செ.ராசு கூறியதாவது:

கல்வெட்டில் செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஏரி இருந்த பகுதி செருக்கலிநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னா், வடகரை நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த நாட்டை நிா்வாகம் செய்தவா்கள் நாடாளா் எனப்பட்டனா். ஊரை ஆண்டவா் ஊராளி என்று அழைக்கப்பட்டதைப் போல, நாட்டை ஆண்டவா் நாடாளா் என்று அழைக்கப்பட்டனா். அதுவே பிற்காலத்தில் நாட்டாா் எனப்பட்டனா். இந்த நாடாளரால் ஏரி உருவாக்கப்பட்டது.

இந்த ஏரி நட்டன் ஏரி என்று அழைக்கப்பட்டு வந்தது கல்வெட்டின் மூலமாக தெரியவந்தது. ஏரியின் கரை சிறை என்றும், ஏரியின் நீா்வெளியேறும் மதகு வாய் என்றும் கூறப்பட்டது. நட்டன் என்பது சிவபெருமான் பெயா் அல்லது தனிப்பட்ட தலைவன் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த ஏரியின் பயனை நாடாளரின் வழியினராகிய மக்கள் மக்கள், பேரா் பேரா் அல்லாமல், வேறு யாராவது அனுபவித்தால் அவா்கள் வம்சம் அற்றுப்போவாா்கள். அதாவது நாடாளரின் வம்சத்தினா் அனுபவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேச்சு ஒலியைப்போல தலை என்பதற்கு தலைய் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஏரியைப் பாதுகாத்தவா், அடி (கால்) எங்கள் தலைமேலது என்று கூறப்பட்டுள்ளது.


கல்வெட்டின் தொடக்கத்தில் பல்லவா் கிரந்த எழுத்தான ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொன்மையான தமிழ் எழுத்துகள் சிலவற்றில் தமிழ் பிராமி தாக்கமும், சில எழுத்துகளில் வட்டெழுத்தின் சாயலும் உள்ளன. இதே காலத்தைச் சோ்ந்த ஸ்ரீ சோழிக அரையன் அகணிதன் குளம் கரூா் மாவட்டம், வெள்ளியணை என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90 அணைகள் கட்டி நீா்ப்பாசன வசதி பெருக்கிய கொங்கு மக்களின் தொடக்க முயற்சியை இது காட்டுகிறது. இதன் விவரம் ஈரோடு மாவட்ட நிா்வாகத்துக்கும், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான இந்தக் கல்வெட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.






திருப்பூப் பலகை

 மலர்கள் என்றாலே அழகு தான் . மலர்களின் அழகை இரசிக்காதவர்கள் எக்காலத்திலும் இல்லை . பெண்கள் தாங்கள் மலர் சூடி மகிழ்வதைப் போல இறைவனுக்கும் மலர் சூட்டி மகிழ்ந்தனர் . இவ்வாறு இறைவனுக்கு சூட்டும் மலர்களை தொடுக்க கோயில்களில் உள்ள இடம் தான் திருப்பூப்பலகை . 

           இறைவனுக்கு பூ நிவந்தங்கள் செய்ய கோயிலுக்கு அருகில் நந்தவனங்களை அமைத்து, அங்கு பல்வேறு மலர்ச் செடிகளை பயிரிட்டனர் . கோயில் நந்தவனங்களில்  சேகரித்த பூக்களை  திருப்பூ மண்டபத்தே சேர்த்தனர் . அங்கு கோயில் பணியாளர்கள் மலர்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் அளந்தும் எண்ணிக்கையிட்டும் தொடுத்தனர் .  பூக்களை மலர்மாலையாக தொடுக்கப் பயன்படுத்தப் பட்ட கற்பலகையை திருப்பூப்பலகை என்ற பெயரில் அழைத்தனர் .


பல கோயில்களில் இதற்கு தனியே இடம் ஒதுக்கி கல்லால் பலகையும் அமைக்கப்பட்டு உள்ளது . இக்கற்பலகை வழ வழப்பாகவும் கல்வெட்டுடனும் காணப்படுகிறது . சில இடங்களில் சிற்ப வேலைப்பாடுடன் காணப்படுகிறது   . இப்பலகையிலோ அல்லது தனித்தோ மலர் கட்டும் நார் நனைப்பதற்கு தேவையான நீர் நிரப்பப் சிறு கற் குழிகளும் அமைந்து காணப்படுகின்றது . இப்பலகையை சுற்றி நாற்புறமும் பூக்கட்டும் பணியாளர்கள் அமர்ந்து பூக்கட்டுவதற்கு ஏற்ப கல் இருக்கைகளும் இருக்கின்றன .  


திருப்பூர் மாவட்டம், கொழுமம் என்ற இடத்தில் அமைந்த பூப்பலகை கல்வெட்டுடன் உள்ளது . அதில் உள்ள கல்வெட்டாவது

 " ஸ்வஸ்தி ஸ்ரீ ஆளுடையார் விகேசுவர

தேவரான விசையாலராயர் 

இட்ட திருப்பூப் பலகை " 

என்று காணப்படுகிறது . கி. பி 13 ம் நூற்றாண்டாக இருக்கலாம்.





கொடுமணல் பெருங்கற்கால சின்னங்கள் அகழாய்வு, கொடுமணல், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.

தமிழகத் தொல்லியல் துறை 1997 மற்றும் 1998ல் கொடுமணல் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அகழாய்வு செய்தது . அங்கு இருந்ததிலேயே பெயரிதும் நல்ல நிலையில் உள்ளதுமான ஒரு கல்வட்டத்துடன் கூடிய கற்பதுக்கை அகழாய்வுக்கு தேர்ந்து எடுத்து ஆய்வு மேற்கொண்டனர் . இந்த ஈமச்சின்னமானது ஒரு பெரிய கல் வட்டத்தினுள் ஒரு சிறிய கல்வட்டமும் அதனுள் கற்பலகையினால் ஆன ஒரு வட்டமும் அதன் நடுவே கற்பதுக்கை பல அறைகள் கொண்டதுமாக இருந்தது . 

இப்பெருங்கற்கால சின்னத்திலிருந்த தாழி ஒன்று எடுக்கப்பட்டது . அதனுள் மானின் எலும்பும் அரியவகை கல்மணிகள் (7000) , கோடாரி உள்ளிட்டவை இருந்தன. மேலும் அருகில் நீண்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கபட்டது . வாள் அருகே மானின் எலும்புகள் கிடைத்துள்ளதால் உயிர்ப்பலி சடங்கு  நடந்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . 

மேலும் கற்பதுக்கைகள் அடுத்தடுத்த அறையில் ஈமச்பொருட்களுடன் கூடிய கருப்பு சிவப்பு பானைகள் , அம்பு முனைகள் , வாள், கத்தி , கோடாரி, வில் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன . இதன் மூலம் இந்த மிகப்பெரிய ஈமச்சின்னமானது வீரன் அல்லது தலைவனுக்காக இருக்கலாம் . 
இதற்கு அடுத்து அருகில் இருந்த மேலும் சில ஈமச்சின்னங்களை அகழாய்வு மேற்கொண்டதில் இரும்பு கத்திகள், கல்லாலான ஜாடிகள் , சூது பவள மணிகள் , அம்பு முனைகள் மற்றும் இரும்பாலான பொருட்கள் கிடைத்தன .
மேற்கொண்ட இந்த ஈமச்சின்ன அகழாய்வுகளில் ஒருந்து பெருங்கற்காலத்திலேயே இங்கு மக்கள் நல்ல நாகரீகத்துடன் வாழ்ந்து உள்ளனர் என்று கருதலாம் .


தொடரும்...

கொடுமணல்

கொடுமணல்

              ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் வடகரையில் உள்ள கிராமம் தான் கொடுமணல் . இன்றைக்கு சின்னஞ்சிறிய கிராமமாக உள்ள இந்த ஊர் தான் சங்ககாலத்தில் மிகவும் பரபரப்பாக வெளிநாடுகளுடன் வாணிகம் செய்த ஊர்.

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் " கொடுமணம் பட்ட விணைமான் அருங்கலம்" என்று பாடப்பெற்றத்தையும் இந்த வணிக நகரத்தை தொல்லியல் அறிஞர் புலவர் ராசு கண்டறிந்ததைப் பற்றி முந்தைய பதிவில் கண்டோம். இனி தொடர்ந்து கொடுமணலின் சிறப்புகள் குறித்து காண்போம் . 

                               கொடுமணலின் காலத்தை அங்கு காணப்படும் ஈமச்சின்னங்கள் மற்றும் அகழாய்வு செய்த பின் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கின்றனர் . அவை

(1) கி.மு 500 இருந்து கி.பி. 100 வரை

 (2) கி.பி 100 இருந்து கி.பி 300 வரை 

இதில் முதலாம் காலத்தில் உள்ள ஈமச்சின்னங்களை பெருங்கற்கால ஈமச்சின்னங்களாக பகுக்கலாம் . 

                                     தொல்லியல் துறையால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இடங்கள் முதலாவதாக நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ள நத்தமேடு (வாழ்வியல் இடம்) அடுத்ததாக நத்தமேட்டிற்கு வடக்காக உள்ள ஈமக்காடு உள்ளிட்டவை ஆகும் . 

நாம் முதலில் இங்குள்ள ஈமக்காட்டினையும் அங்குள்ள ஈமச்சின்னங்கள் குறித்தும் ஒரு அடிப்படை விவரங்கள் அறிந்து கொண்டு, பின்னர் அகழாய்வு குறித்து பார்ப்போம் . 


பாண்டியன் நகரம் : 

பாண்டியன் நகரம் என்ற பகுதி தான் கொடுமணலில் உள்ள பெருங்கற்கால ஈமக்காடாகும் . இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட மிகப்பெரிய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருந்தன . இந்த ஈமச்சின்னங்களை அங்குள்ள மக்கள் பாண்டவர் வீடு அல்லது பாண்டியர் குழி என்றழைக்கின்றனர் . பாண்டவர் வீடு என்ற இந்த கல்வீடுகளில் பாண்டவர்கள் தங்கி இருந்தார்கள் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்  . ஆனால் அடிப்படையில் அவை ஈமக்குழிகளாகும். மாண்டவர்களை அடக்கம் செய்து அதன் மீது எழுதுப்பட்ட வீடு என்றும் அதுவே பின்னாளில் பாண்டவர் வீடு அல்லது பாண்டியர் வீடு என்றும் மருவியது . இன்றைக்கு இந்த பாண்டியர் வீடுகள் நிறைத்த இடம் பாண்டியன் நகரம் என்று பெயர்.  


கொடுமணல் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஒரு விளக்கம்.

பெருங்கற்காலம் :

பெரிய பெரிய கற்களை கொள்ளது ஈமச்சின்னங்களை உருவாக்கிய காலத்தை பெருங்கற்காலம் என்கிறோம் .பெருங்கற்காலம் என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய காலம் என்பது ஆய்வாளர்கள் கருத்து .  


பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஓர் அறிமுகம் :

1)கற்திட்டைகள் 

2)கல்வட்டம்

3) கற்பதுக்கைகள்

4)நெடுங்கற்கள்.


1)கற்திட்டைகள் :

                             இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.


2) கல்வட்டம் :

                              இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதை சுற்றி வட்டமாக குண்டு கற்களை வட்டமாக அமைப்பது கல்வட்டம் ஆகும் . 


3)கற்பதுக்கைகள் :

                              இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதை சுற்றி நிலமட்டத்திற்க்கு கீழே நான்கு பக்கமும் பலகை கற்களை நிறுத்தி , மேல் பக்கமும் பலகை கல்லை வைப்பது கற்பதுக்கை ஆகும் .


4) நெடுங்கற்கள் :

                                  இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதனருகில் உயரமான ஒரு கல்லை நேராக வைப்பது நெடுங்கற்கல் ஆகும் .

கொடுமணலில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் :

கொடுமணலில் உள்ள ஈமச்சின்னங்கள் பெரும்பாலும் கல்வட்டங்களுடன் அமைந்த கற்பதுகைகளும் சிலவற்றிற்க்கு நெடுங்கற்கள் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது . அடுத்து ஈமச்சின்னங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளை குறித்து தொடர்வோம் .