Tuesday, December 6, 2022

தியாகனூர் புத்தர்

                  உலகில் தற்போதும் சிறப்புற்று விளங்கும் மதங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.  இம்மதமானது புத்தர் என்று போற்றப்படும் சித்தார்த்த கௌதமரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது. இம்மதம் தோன்றிய சில நூற்றாண்டுகளிலேயே அரசுகளின் ஆதரவைப் பெற்று  பரவத் தொடங்கியது. குறிப்பாக வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கை, சுமத்ரா, தாய்லாந்து , சீனா ஆகிய நாடுகளுக்கு இம்மதம் பரவியது. சங்கம் என்ற அமைப்பு  பௌத்த நெறிகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தது. இதற்கு ஆதரவு அளித்து துணை நின்ற அரசர்களில் முதன்மையானவர் அசோகர் .

                       கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆட்சிசெய்த அசோகச் சக்கரவர்த்தி பௌத்தத்தை பெரிதும் ஆதரித்தார். அவர் ஆட்சிக் காலத்தில் இம்மதம் மெல்ல தமிழ்நாட்டை அடைந்தது .  தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பௌத்தம், சுமார் 700 நூற்றாண்டுகள் சிறப்புற்று இருந்தது.  தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ மன்னர்களும் பௌத்த மதத்தை ஆதரித்தனர்.  ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் காஞ்சியில் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கியதற்கு பௌத்த காஞ்சியே சான்று ஆகும் . குறிப்பாக சீனப் பயணி யுவாங் சுவாங் காஞ்சிபுரம் பகுதியின் பௌத்த விகாரங்களை பற்றி தனது குறிப்புகளில் குறிப்பிடுகிறார். பௌத்தம் தமிழகத்தில் நிலை பெற வணிகர்களும் காரணமாக இருந்தனர் .பௌத்தத்திற்கு வர்த்தக மையங்களுக்கும் இடையே வலுவான தொடர்பு இருந்தது . இதனாலேயே கடலோர பகுதிகள் மற்றும் வணிகப் பெருவழிகளில்  பௌத்த எச்சங்கள் மிகுதியாக கிடைக்கின்றன. 

          தமிழகத்தில் கிபி ஆறாம் நூற்றாண்டின் போது பக்தி இயக்கம் தோன்றியது பௌத்தத்திற்கு கடும் சவாலாக இருந்தது. சைவத்தின் எழுச்சியால்  பௌத்தத்தின் செல்வாக்கு சரிந்தது . அரசுகளும் சைவத்தை ஆதரித்தது. இதனால் பௌத்தம் மெல்ல தன் செல்வாக்கை இழக்க தொடங்கியது . எனினும் சோழ பேரரசர் இராஜ ராஜன் காலத்தில்  நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரங்கள் இருந்ததற்கும் அதற்கு செய்யப்பட்ட நிதியுதவி பற்றியும் சான்றுகள் கிடைக்கின்றன. கி.பி எட்டாம் நூற்றாண்டிற்கு பின் தமிழகத்தில் பௌத்தம் மெல்ல வீழ்ந்ததால் இங்கு கிடைக்கும் எச்சங்கள் பெரும்பான்மையானவை  சிதைந்த நிலைகளில் இருக்கிறது.  எனினும் தமிழகத்தின் தனித்துவமான உயரமான புத்தரை பற்றி இங்கு காண்போம் . 

                       தமிழகத்தில் பெரும்பான்மையான  புத்தரின் உருவங்கள் தனி சிற்பங்களாக காணக் கிடைக்கிறது . புத்தரின் உருவமானது நின்ற நிலையிலோ , அமர்ந்த நிலையிலோ, கிடந்த நிலையிலோ அமைக்கப்பட்டுள்ளன. இப்போது நாம் பெரம்பலூர் - சேலம் இடையே கம்பீரமாக அமர்ந்து இருக்கும் புத்தர் உருவங்களைப் பற்றி இனி காண்போம் .

                             முதலாவது  தமிழகத்தின் மிகப் பெரிய சிலை, ஆனால் இருப்பது 100 ஆண்டுகள் பழமையான சிறிய கோயிலில். புத்தர் அமர்ந்த நிலையில் காணப்பட்டாலும் உயர்மோ சுமார் 7 அடி . தலைமுடி சுருளாகவும், அகன்ற தோள்களில் துறவற அங்கி அணிந்த நிலையில் கண்கள் பாதி மூடியவாறு காணப்படுகிறார். காதுகள் நீளமாகவும் கழுத்துப் பகுதியில் மூன்று கோடுகளுடன் , வலது கையை இடது கையின் மேல் வைத்து உள்ளங்கைகளை மேலே பார்த்தவாறு அமைக்கப்பட்ட இச்சிலையில் வலது கையின் பெருவிரல் மற்றும் மூக்கின் நுனி சிதைவுற்று காணப்படுகிறது .சிலை உள்ள கோயிலின் வாயில் புத்தர் சிலையை விட சிறியதாக இருக்கிறது. இக்கோயிலின் விமானத்தில் நான்கு புறமும் நான்கு உருவங்கள் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி உள்ள கோயிலின் முன்பக்கத்தில் புத்தர் உருவமும், தெற்கு பக்கத்தில் கண்ணனின் உருவமும், மேற்கு பக்கத்தில்  திருமாலின் உருவமும், வடக்கில் கிருஷ்ணர் உருவமும் வைக்கப்பட்டுள்ளன. புத்தரை திருமாலின் அவதாரமாக கருதி இவ்வாறு கட்டப்பட்டு இருக்கலாம் .

                                                             


                                                       


                                                 

                                                         



                        இரண்டாவதாக நாம் காணும் புத்தர்  2013 ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபத்தில் அமர்ந்திருந்தார். வயல்களுக்கு நடுவே இருந்த இப்பழங்கால சிலையை மீட்டெடுத்து தியான மண்டபத்தில் வைத்திருக்கின்றனர். இதில் புத்தர் பத்மாசனத்தில் (பத்ம என்றால் தாமரை )தாமரை மேல் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். சுமார் 5 அடி உயரமுடனும், தலைமுடி சுருளாகவும், தோள்களில் துறவற அங்கி அணிந்த நிலையில் கண்கள் பாதி மூடியவாறு காணப்படுகிறார். காதுகள் நீளமாகவும் கழுத்துப் பகுதியில் மூன்று கோடுகளுடன் காணப்படுகிறார். வலது கையை இடது கையின் மேல் வைத்து உள்ளங்கைகள் மேலே நோக்கியவாறு உள்ளது .

                                                    










                    பௌத்தம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்ததற்கான சான்றாக விளங்கும் இச்சிலைகள் போன்று பல சிலைகள் தமிழுகமெங்கும் விரவி கிடைக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இறந்த ஒரு மனிதனின் வாழ்வும், போதனைகளும் இன்றைக்கும் நமக்கு தொடர்புடையதாய் இருப்பது ஆச்சரியமே.

                                                  

Tuesday, November 8, 2022

குன்னத்தூர் / வரிச்சியூர் பிராமி , மதுரை

                       மதுரை , தமிழகத்தின் பழம்பெரும் நகரமாகும் . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பெருமைக்குரிய தலைநகரமாக விளங்கியதுடன் இன்றும் தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக விளங்குகிறது . சங்க காலத்தில் இருந்து பல்வேறு சமய நம்பிக்கைகளை தன்னுள் கொண்டு விளங்கும் நகரம் இது . மதுரையின் வரலாற்றோடு தொன்மையான சமண சமயத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது . சமண மதத்தின் தோற்றத்தைப் பற்றியும் அது தமிழகத்தில் பரவியது பற்றியும் காண்போம் .

                         சமண மதமானது கி.மு ஆறாம் நூற்றாண்டில் பீகாரில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக தென்னமும் நோக்கி பரவியதாக கருதப்படுகிறது . சமணர்கள் என்றால் துறவிகள் என்று பொருள் . துறவு நெறியை வலியுறுத்திய மதம் சமண மதம் ஆகும் . அடைக்கலம் , அன்னதானம் , மருத்துவம் , கல்வி ஆகிய நான்கு தானங்களையும் வலியுறுத்தியது இம்மதம் . சமண சமயத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் , அவர்களில் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் என்கிற ஆதிநாதர் , 24வது தீர்த்தங்கராக மகாவீரர் தோன்றினார் . இவரின் இயற்பெயர் வர்த்தமானர் ஆகும் . இவரே சமண சமயத்தை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது .

                        மகாவீரர் கி.மு 527 ம் ஆண்டு , தன் 72 ஆவது வயதில் வீடுபேறு அடைந்தார் . இவர் வழிவந்த மாணவர்கள் பலரும் இவரை பின்பற்றியதுடன் இவரின் கொள்கையை நாடு முழுவதும் பரப்பினர் . இவர் வழிவந்த மாணவர்களுள் ஒருவர்தான் பத்திரபாகு முனிவர் . இவரே பேரரசர் சந்திரகுப்த மவுரியரின் குருவாக விளக்கினார் . 

கி மு 4 ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தை தழுவினார் என்றும் மகத நாட்டில் பெரியதோர் பஞ்சம் ஏற்பட இருப்பதை முன்னரே அறிந்த பத்திரபாகு முனிவர்  தன்னுடைய சீடர்கள் 12,000 பேருடன் தென்னகம் நோக்கி புறப்பட்டார் . சந்திர குப்தரும் அரசு பதவியைத் துறந்து தன் குருவுடன் தென்னாடு நோக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது . இன்றைய மைசூர் பகுதிக்கு அருகே உள்ள சரவணபெலகொலா என்னும் இடத்தில் இவர்கள் தங்கினர் என்றும் அங்கேயே சந்திர குப்த மவுரியர் வீடு பேறு அடை ந்ததாகவும் கூறப்படுகிறது . அங்கிருந்த காலத்தில் பத்திர பாகு தன் சீடரான விசாகாச்சாரியார்  என்பவரை சோழ , பாண்டிய நாடுகளுக்கு சமணத்தை பரப்பும்படி அனுப்பியதாக கூறப்படுகிறது . இவ்வாரே பாண்டிய நாட்டிற்கு சமண சமயம் பரப்பியதாகவும் , ஒரு காலத்தில் சமணர் பல்லாயிரம் பேர் வாழ்ந்த ஊர்களாக பாண்டிய நாடு விளங்கியதாக அறியப்படுகிறது . சமணம் மதுரையில் சிறப்புற்று இருந்ததற்குச் சான்றாக சமண தடயங்களை இன்றும் நாம் காண முடிகிறது .

 மதுரையை  சுற்றி உள்ள மலைகளில் உள்ள இயற்கையாக அமைந்த குகைகளில் சமண துறவிகள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக  கற்படுக்கைகள் மற்றும் அங்கு அத்துறவிகளின் பெயர் அல்லது கற்படுக்கை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டாக   கிடைக்கின்றன . மொத்தம் 13  இடங்களில் 30க்கும் மேற்பட்ட தமிழி கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன . கி.மு 300 முதல் கி.பி 300 வரை சமணர்கள் வாழ்ந்து இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன .  குன்னத்தூர்/ வரிச்சியூர் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள குகைதளத்தை பற்றி இங்கு காண்போம் .

மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சுமார் 15km தொலைவில் வரிச்சியூர் என்னும் சிறு கிராமம் அமைத்துள்ளது . இங்கு காணப்படும் சிறு குன்றில் இயற்கையாக அமைந்த பெரிய குகை ஒன்று காணப்படுகிறது  . சுமார் 30 பேர் தங்கும் அளவில் காணப்படும் இக்குகை வடக்கு நோக்கி அமைந்துள்ளது . பல கற்படுக்கைகள் வெட்டப்படுள்ளது . குகையின் மேல் மடிப்பில் நீர் வடி விளிம்பு செதுக்கப்பட்டுள்ளது . இந்த குகையில் வாழ்ந்த மக்களுக்கு மன்னர்களும் வாணிபர்களும் , பொது மக்களும் உதவி செய்துள்ளனர் என்பதற்கு இங்கு காணப்படும் 3 தமிழி கல்வெட்டுகளே சாட்சி . நீர் விளிம்பின் மேலும் கீழுமாக காணப்படும் இம்கல்வெட்டுகள் மூன்றும் கி.மு 2ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் .

கல்வெட்டு 1:

" பளிய் கொடுபி..."

இங்குள்ள குகையில்  பள்ளி அமைத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது . ஆனால் அவரின் பெயர் காலப்போக்கில் சிதைந்துள்ளது .

கல்வெட்டு 2 :

'..டா....  ஈதா வைக ன நூறுகல நெல்..."

நூறு கலம் நெல் வழங்கப்பட்டதை கூறும் இக்கல்வெட்டில் வழங்கப்பட்டவரின் பெயர் சிதந்துள்ளது .நூறு என்ற எண் அளவை குறிக்கும் காலத்தால் முதல் கல்வெட்டு இதுவே . கலன் என்பதும் அளவுப்பெயர் . அதேபோல் நெல்லை தானமாக கொடுக்கப்பட்டத்தை சொல்லும் குகைக்கல்வெட்டு இதுவே ஆகும் .


கல்வெட்டு 3 :

‘இளநதன் கருஇய நல் முழு உகை'

இக்குகையை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டத்தை கூறுகிறது . 

பாறையில் அமைந்த இடைப்பட்ட பகுதியை இன்று குகை  என்கிறோம் . கல்வெட்டு வழக்கில் குகை என்பது துறவு நிலை மேற்கொள்வோர் வாழும் பாறைகள் மிகுந்த உள்ள இருப்பிடத்தை குறிக்கும் . சமண துறவிகள் பெரும்பாலும் மலைப் பாறைகளில் அடித்தளத்தை செதுக்கி படுக்கையாக பயன்படுத்தி உள்ளனர்  .

கி.பி 15ம் நூற்றாண்டு ,

விஜயநகர காலத்து கல்வெட்டு ஒன்று  கற்படுக்கையின் மீது வெட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்னும் ஊர் பெயர் இடம் பெற்றுள்ளது . தற்போது இங்கு உள்ள  குகையின் ஒருபுறம் முருகன் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .


    












  .

குண்டான்குழி மகாதேவர் கோயில், மதகடிப்பட்டு, புதுச்சேரி.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் மதகடிப்பட்டு. தற்போது சிறு கிராமமாக தோற்றமளிக்கும் இவ்வூர் சோழர் காலத்தில் எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்பதை இங்குள்ள கோயிலைக் கொண்டு நாம் அறிந்துகொள்ள முடிகிறது. சோழர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்களம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இதில் "ஜெயங்கொண்டான்" என்பது இராஜராஜ சோழன் பல நாடுகளை வென்றதாலும், கப்பற்படையை கொண்டு எண்ணாயிரம் தீவுகளை வென்றதாலும் வழங்கப்பட்ட சிறப்பு பெயர் ஆகும். ஜெயங்கொண்டான் என்னும் பெயருடைய சில ஊர்கள் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் உண்டு. திரிபுவனமாதேவி என்பது இராஜராஜனின் தேவியருள் ஒருவர். இதில் சதுர்வேதிமங்கலம் என்பது பிராமணர்கள் குடியிருப்பு பகுதியாகும். இதன் மூலம் இராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று என்பது புலப்படுகிறது.


இராஜராஜன் சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னரே இங்குள்ள கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. "திருகுண்டாங்குழி மகாதேவர் கோயில்" என அழைக்கப்படும் இவ்வாலயமானது, அடித்தளம் முதல் கலசம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட முழுக் கற்றளி ஆகும்.  மேற்கு பார்த்து அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் ஆவுடையார் காணப்படவில்லை, பாணம் மட்டுமே உள்ளது . தெற்கு பார்த்து அமைத்துள்ள அம்மன் சன்னதியில் அகிலாண்டேஸ்வரி அம்மன் வீற்றிருக்கிறார். சப்த மாதர்களுக்கு தனி சன்னதி உள்ளது . கோயிலின் கருவறை சதுரமாகவும் மேலே உள்ள கிரிவம் வட்டமாகவும் அதன் சிகரம் உருண்டையாகவும் உள்ளன. விமானத்தின் கிரிவ கோஷ்டத்தில்  வடக்கு  பிரம்மா, மேற்கு விஷ்ணு, தெற்கு தட்சிணாமூர்த்தி, கிழக்கு முருகன் என நான்கு புறமும்  அழகான சிற்பங்கள் அமைந்துள்ளன. கிரிவத்தில் இரண்டு நந்திகள் என எட்டு நந்திகள் அமைந்துள்ளன.  இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இராஜராஜன் சோழன் காலம் முதல் காலம் குலோத்துங்க சோழன் வரை அனைவரின் கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கிறது இக்கோயில்.  
 
"ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளிய திருக்கற்றளி" என்ற கல்வெட்டின் மூலம்  ராஜராஜ சோழனால் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டதை  நாம் அறிந்து கொள்ள முடிகிறது. முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகியவரின் மெய்க்கீர்த்திகள் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. மெய்க்கீர்த்தி என்பது அரசனுடைய பரம்பரை அடைந்த வெற்றி, அம்மன்னின் ஆட்சி காலம், பட்டப்பெயர் முதலியவற்றை பாடல் வரிகளாக தெரிவிப்பது. பிற்கால சோழர் ஆட்சியில் தான் மெய்க்கீர்த்திகள் வடிவம் பெற்றன. ஒவ்வொரு அரசருக்கும் ஒவ்வொரு வகையான தொடர்கள் உண்டு . மெய்க்கீர்த்தியின் அடியைக் கொண்டே இந்த மன்னன் யார் என்று அறிந்து கொள்ள முடியும்.

கல்வெட்டுக்கள் :
மெய்க்கீர்த்தி கல்வெட்டுகள் :
1) முதலாம் ராஜராஜனின்  "திருமகள் போலப் பெருநிலச் செல்வி" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி பாடல் பொறிக்கப்பட்டுள்ளது.

2) முதலாம் ராஜேந்திரன் சோழனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர இருநில மடந்தையும் " எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும்,  முதலாம் ராஜாதி ராஜனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடை" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், இரண்டாம் ராஜேந்திரனின் "திருமாது புவியெனும்" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், வீர ராஜேந்திரனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரமே துணையாக" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், முதலாம்  குலோத்துங்க சோழனின் "திருமன்னி விளங்கும் பூமே லரி" எனத் தொடங்கும் அரிய மெய்க்கீர்த்தியும், விக்கிரம சோழனின் "ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாது புணரப் புவிமாது" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன. 

3)  முதலாம் இராஜராஜன் ( கி.பி 1012 ) காலத்தில் விஷ்ணு சேரியைச் சேர்ந்த பத்தங்கி திருவையாறு தேவ கிரமவித்தன் என்பான் திருகுண்டாங் குழி மகாதேவர்க்கு நந்தா விளக்கு கொண்றெரிப்பதற்காக 96 ஆடுகள் கொடுத்துள்ளான் என்பது கல்வெட்டு செய்தி.

பல குடிகள் சேர்ந்து வாழும் இடம் சேரி எனப்பட்டது. சோழமண்டல கரையில் புதிதாக தோன்றிய ஒரு சேரி புதுச்சேரி என்று பெயர் பெற்றது . இதுவே இன்று பாண்டிச்சேரி என்று திரிந்துள்ளது. பெருமாள் கோயிலில் பணிபுரியும் பிராமணர்களுக்கு தனியே ஏற்படுத்திய சேரிகளை விஷ்ணு பெயரிலேயே அமைத்துள்ளனர். இங்கு மொத்தம் 12 சேரில் சேரிகள் அமைந்துள்ளதாக தெரிகிறது. மதுசூதனச்சேரி, கேசவ சேரி, வாமனச்சேரி, மாதவ சேரி, நாராயணசேரி, கோவிந்த சேரி  திரிவிக்கிரமசேரி, ஸ்ரீதரசேரி, தாமோதரசேரி, பத்மநாபசேரி  ரிஷிகேஷ சேரி  விஷ்ணு சேரி என்பன ஆகும்.இக்கல்வெட்டில்  விஷ்ணு சேரியைக் சேர்ந்த பத்தங்கி திருவையாறு தேவ கிரமவித்தன் என்பவன்  மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகள் கொடுத்துள்ளான் என்பது செய்தி. கோயில்களில் நந்தா விளக்கு இடைவிடாமல் தொடர்ந்து எரிப்பது வழக்கம் அதற்காக செலவுக்காக பெருமக்களின் பொறுப்பில் ஆடுகளை தானமாக வழங்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு விளக்குகள் எரிக்கபட்டன. 

4) முதலாம் இராஜராஜன்  காலத்தில் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையார் 13 பிராமணரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கிய நிலங்களை பனிரெண்டாம் தரத்தின் படி வரியிருக்க முடிவு செய்ததை குறிப்பிடுகிறது. அந்நாளில் நிலங்கள் அவ்வப்போது அளவிடப்பட்டு நிலத்தின் தரத்தை பொறுத்து, அதற்கு ஏற்ப நிலவரி விதித்தனர் .நிலத்தின் தரத்தை "தரப்பொத்தகம்" என்னும் பதிவேடு பாதுகாக்கப்பட்டு வந்ததை அறியலாம். கல்வெட்டின் படி நிலத்தை பன்னிரண்டாம் தரமாக கருதி வரி வசூலிக்கபட்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

5 ) முதலாம் இராஜராஜன் காலத்தில் திருகுண்டாங் குழி மகாதேவருக்கு திருவமுதுக்கும், திருப்பலிக்கும்  ,திருவிழாக்கும் நிலங்கள் அளித்தமையை கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருவமுது என்பது கோமில்களில்‌ இறைவன் வழிபாட்டிற்‌கெனத்‌ தூய முறையில்‌ ஆக்கப்பெறும்‌ நிவேதன உணவு. கோயிலில் நடைபெறும் திருவிழா மற்றும் பூசையில் நிகழும் ஸ்ரீ பலிக்கும் நிலங்கள் கொடுத்ததை குறிப்பிடுகிறது.

6 ) முதலாம் இராஜராஜன் காலத்தில்  கோயிலில் சிவப்பிராமணர் கால் நந்தா விளக்கு எரிக்க ஏற்றுக்கொண்டதை மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

7) முதலாம் ராஜேந்திரன் (கி.பி 1015 ) திருக்குண்டாங்குழி பரமேஸ்வர சுவாமிகளுக்கு மதுசூதனச் சேரியைச் சேர்ந்த திருமிழலைக் கௌதமன் செட்டி விரட்டனான உத்தம நம்பி என்பான் நந்தா விளக்கொன்றெரிக்க 90 ஆடுகள் கொடுத்தமையை தெரிவிக்கிறது. இதில் மிழலை என்பது சோழர் காலத்தில் மாயவரம் பகுதியில் அமைந்த மிழலை நாட்டை குறிப்பதாகும் . தற்போது மிழலை என்ற ஊர் மாயவரத்தில் இருந்து 12 கால் தொலைவில் அமைந்துள்ளது.

8) இராஜேந்திரன் (கி.பி 1016) கோவிந்த சேரி ஆலந்தூர் காஸ்யபன் மகாதேவனான திருஞானசம்பந்தடிகள் என்பார் ஐம்பது நிறையுள்ள மூடியுடன் கூடிய மலையன் கெண்டி ஒன்றைத் திருக்குண்டாங்குழி மகாதேவருக்கு வழங்கியமை பற்றியும் சூரசூளா மணிச்சேரி வெள்ளிலைப் பாக்கத்து ஆடவல்லவன் தில்லையழகன் என்பான் வைத்த கால் நந்தா விளக்கு பற்றியும் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடும் கெண்டி என்பது குவளையின் உடற்பகுதியில் தூம்புகுழலுடன் அமைக்கப்பட்டது. இறைவழிபாட்டில் ஆகம விதிப்படி நீர் இறைக்க பயன்படுத்துவது.

9 ) இராஜேந்திர சோழன் ( கி.பி 1016 ) ஸ்ரீ கார்யந்திரித்துகின்ற கூட்டப் பெருமக்கள் சிவப்பிராமணர் நால்வருக்குத் திருவுண்ணாழிகையில் திருப்பணி செய்வதற்கு நிலமளித்த செய்தியை தெரிவிக்கிறது.

10) முதலாம் ராஜேந்திரன் காலத்தில் பூவம் என்பவள் வைத்த நந்தா விளக்கு பற்றிய ஒரு கல்வெட்டும் உள்ளது.

11) இராசாதி ராசன் காலத்தில் திருகுண்டாங்குழி மகாதேவர்க்கு தயிரமுது படைத்தமை பற்றியது.



12) முதலாம்  குலோத்துங்கன் (கி.பி 1075 ) கோயிலில் உள்ள சப்த மாதருக்கு  திருவமுது படைக்க பிராமண பெண்கள் சிலர் 45 பொற்காசுகள் கொடுத்ததைப் பற்றி கல்வெட்டு.

13) முதலாம் குலோத்துடன் (கி.பி 1114) ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி தேவருக்கு அமுதப் படைக்க சிவப்பிராமனர்கள் ஒப்புக்கொண்டு நெல்லை பெற்றுக்கொண்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.

14) விக்ரமன் (கி.பி 1026) திருக்குண்டாங்குழி மகாதேவருக்கு பொய்யா மொழி என்ற பெயரில் ஒரு நந்தனம் அமைக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

15) திருக்குண்டாங்குழி மகாதேவர்க்கு சீரீளங்கோ பட்டன் சந்தி விளக்கு வைத்ததை தெரிவிக்கிறது. திருக்கோயில்களில் ஆறு வேலைகளிலும், அதாவது ஆறு காலமும் வழிபாடு நிகழ்த்துவது சிறப்புடையது ஆகும் .  அதில் பகலும் இரவும் கூடும் வேளையில் ஏற்றப்படும் விளக்கு சந்தி விளக்கு ஆகும். சந்தி விளக்கு பெரும்பாலும் மாலையில் தான் ஏற்றப்படுகிறது, சில இடங்களில் காலையில் ஏற்றப்படுவதும் உண்டு. 

16) திருக்குண்டாங்குடி பரமேஸ்வர ஸ்வாமிகளுக்கு சிவப்பிராமணர்கள் இவ்வூர் கோதண்டராமச்சேரி திருமிழிலை வீற்றிருந்தான் பட்டன் பிராமணி ஆண்டமைச்சானி கொடுத்த 12  ஆடுகள் பெற்றுக் கொண்டு சந்தி விளக்கு எரிக்க   ஏற்று கொண்டதை குறிக்கிறது.

17) பெருங்குறிப் பெருமக்கள் கோயில் பண்டாரத்திலிருந்து 37 1/2 காசு பெற்றுக்கொண்டதோடு சில நிலங்களை விற்றுக் கொடுத்ததோடு வட்டியாக கோயிலுக்கு நெல் அளிக்கவும் ஒப்புக்கொண்டதை தெரிவிக்கிறது. பெருங்குறி பெருமக்கள் என்பது சதுர்வேதி மங்களத்தை அமைந்த ஊர் நிர்வாக சபை மற்றும் பிற சபைகளின்  உறுப்பினர்கள் ஆவர் . 

18) அடுத்தது  கிரந்தத்தில் சில கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. அவற்றில் அரசனின் ஆணைப்படி கொற்ற மங்கலத்தைச் சேர்ந்த நாராயணன் என்பான் குண்டாங்குழி கிராமத்தை நிர்வகித்து வந்ததை தெரிவிக்கிறது .

19) அடுத்து கோயிலில் நிவந்தம் பற்றியது. இதன் மூலம் வரும் வட்டியை கொண்டு உணவு படைக்கவும் தும்பை பூக்களால் மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 84 பெருமக்கள் கிராம காரியங்கள் செய்தாக  கல்வெட்டு தெரிகிறது.

20) ஒரு நந்தா விளக்ககெரிக்க 90 ஆடுகள் கொடுத்த செய்தியும், வானவன் மாதேவி நல்லூர் என்ற பெயரில் ஊர் உண்டாக்கி மக்களை குடியேற்றியதையும் குறிப்பிடுகிறது.

21) அடுத்து கோயிலுக்கு வெள்ளித் திருமேனி கோயிலுக்கு செய்து கொடுத்ததை தெரிவிக்கிறது. ஆனால் தற்போது வெள்ளித் திருமேனி அங்கு காணப்படவில்லை.

22) பாற்குளத்து விஷ்ணுதாசக்கிர பவித்தன் என்பான் கருவறை மூன்றாவது தளத்தையும் திருமண்டபத்தின் மூன்றாம் தளத்தையும் கட்டுவதற்கு பொன் கொடுத்ததோடு, காலோடு கூடிய தளிகை ஒன்றையும் அமுதுண்ணக் கொடுத்ததை குறிக்கிறது. தங்கத்தால் செய்யப்பட்ட நிவேதனத் தட்டு தளிகை என்பப்படும்.












Saturday, May 28, 2022

அரியனூர் ( Ariyannur ) , திருச்சூர் , கேரளா

 தொல் பழங்கால மக்கள்  பிறப்பு , இறப்பு இரண்டையும் புனிதமாகக் கருதினர் . இனக்குழுக்களாக  வாழ்ந்த மக்கள் , உயிர் பிரிந்த உடலை தனியிடத்தில் அடக்கம் செய்வதோடு அவர்கள் நினைவாக ஈமச்சின்னங்கள் வைக்கும் வழக்கத்தையும் கற்றுக்கொண்டனர் . இறந் தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையாலும் , ஆவி கோட்பாட்டில் உள்ள நம்பிக்கையாலும் ஈமச்சின்னம்  வைக்கும் வழக்கம் உருவாக்கி இருக்கவேண்டும் . பெரும்பாலும் பெரும் கற்களைக் கொண்டே ஈமச்சின்னங்கள் உருவாக்கி இருக்கிறார்கள் . உலகில்  பல நாடுகளில் உள்ள இச்சின்னங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது .  பெரும் கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் உருவாக்கிய காலமே பெருங்கற்காலம் ஆகும் . சில இடங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே (primary buriyal ) ஈமச்சின்னங்கள் வைப்பதுண்டு . சில இடங்களில் வெட்டவெளியில் இறந்த உடலை கிடத்திவிட்டு பின் பல மாதங்கள் கழித்து அவர்கள் எலும்புகளை பொறுக்கி பானையில் ( தாழி ) வைத்து புதைத்து அதன் மேல் ஈமச்சின்னங்கள் வைப்பதும் உண்டு ( secondary buriyal ) . இவ்வாறு தாழி வைக்கும் போது இறந்தவர்கள் பயன்படுத்தி / பயன்படும் பொருட்களையும் வைக்கும் பழக்கமும் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இவ்வாறு இறப்பு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் பெருங்கற்காலம் ஆகும். அதனாலேயே தொல்பழங்கால வரலாற்றில் "பெருங்கற்காலம்" (Megalithic ) மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

   இயற்கையாக கிடைக்கும் பெருங்கற்களைப் பற்றிய அறிவையும் அவற்றை வெட்டி எடுக்கவும் , இடம் விட்டு இடம் நகர்த்தவும் , தூக்கி நிறுத்தவும் , கற்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் தொழில்நுட்ப அறிவியலும் வளர்ந்த காலமிது . இரும்பு உலோகத்தின் பயன்பாட்டையும் அவற்றின் நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் . கட்டிடக்கலை வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெருங்கற்காலம் பெற்றுள்ளது . இக்காலத்தின் வாழ்விட சான்றுகள் குறைவாகவும் ஈமக்காடுகள் மிகுதியாகவும் கிடைக்கின்றன . தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான  ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன . அவை

1) கல்திட்டை ( Dolmen )

2) கல்பதுக்கை ( cist )

3) கல்குவை ( Cairn )

4) குத்துக்கல் ( Menhir )

5) குடைக்கல் ( Umberlla stone )

6) தொப்பிக்கல் ( hood stone )

7) குடைவரை தாழ்வறை ( Rockcut caves )

8) கல்வட்டம் ( cairn circle )

என்பன ஆகும் .

தமிழகத்தில் கிடைக்கும் ஈமச்சின்னங்கலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஈமச்சின்னங்கள் கேரளாவில் கிடைக்கின்றன . ஈமச்சின்னங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாவே உள்ளது . அவற்றை பற்றி காண்போம் . 

                கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களைச் சுற்றி குடைவரை தாழ்வரை , குடைக்கல் , தொப்பிக்கல் ஆகிய ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன . தமிழகத்தில் இவ்வகைகள் காணப்படுவதில்லை . 

 திருச்சூர் மாவட்டம்  , அரியனூர்  (ARIYANNUR ) என்னும் ஊரில் குடைக்கல் மற்றும்  தொப்பிக்கல் மற்றும் ஹூட்  (Hood stone )  காணப்படுகிறது .  நன்கு செதுக்கப்பட்ட (laterite ) முக்கோண வடிவில் உள்ள

மூன்று அல்லது நான்கு கற்களை சற்று சாய்வாக மேல் பகுதி ஒன்றாக வருமாறு நட்டு அதன் மேல், குடை போன்ற வட்ட வடிவ மூடு கல்லை வைத்து, பார்ப்பதற்கு காளான் போல் காட்சி தருவது குடைக்கல் (umbrella stone ) . இக்கற்கள் எல்லாம் சீராக இழைக்கப்பட்டுள்ளது . இக்குடைக்கல்லின்  அடியில் ஈமப்பொருட்களான தாழி , படையல் பொருட்கள் போன்றவற்றை  வைத்து அதன் மேல் இக்கல்லை நடுவது வழக்கம் .

                                         அடுத்து தொப்பிக்கல் (Hat stone ) , இதன் மேல் பகுதி  மட்டும் குடைக்கல் போலவே உள்ளது .  நன்றாக செத்துக்கட்ட குடையை போன்ற வட்ட வடிவமான மூடு கல்லை  , தரையின் மேல் வைப்பது தொப்பிக்கல் . அதன் அடியிலும் ஈமத்தாழி மற்றும் ஈமப்பொருட்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது .

                          அடுத்து காணப்படுவது ஹூட் ஸ்டோன் என்னும் வகை . முக்கோண வடிவ ஆறு அல்லது ஏழு  கற்களை சற்று சாய்வாக வட்ட வடிவமாக நடப்பட்டுள்ளது . இதை ஹூட் ஸ்டோன் (Hood Stone ) என்கிறார்கள் . இதுவும் குடைக்கல் , தொப்பிக்கல் அருகேயே காணப்படுகிறது .  இவை மூன்றும் ஒரே இடத்தில் காண்பது சிறப்பு .

                                                   











கந்தனச்செரி Kandanassery , திருச்சூர் , கேரளா

 தொல் பழங்கால மக்கள்  பிறப்பு , இறப்பு இரண்டையும் புனிதமாகக் கருதினர் . இனக்குழுக்களாக  வாழ்ந்த மக்கள் , உயிர் பிரிந்த உடலை தனியிடத்தில் அடக்கம் செய்வதோடு அவர்கள் நினைவாக ஈமச்சின்னங்கள் வைக்கும் வழக்கத்தையும் கற்றுக்கொண்டனர் . இறந் தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையாலும் , ஆவி கோட்பாட்டில் உள்ள நம்பிக்கையாலும் ஈமச்சின்னம்  வைக்கும் வழக்கம் உருவாக்கி இருக்கவேண்டும் . பெரும்பாலும் பெரும் கற்களைக் கொண்டே ஈமச்சின்னங்கள் உருவாக்கி இருக்கிறார்கள் . உலகில்  பல நாடுகளில் உள்ள இச்சின்னங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது .  பெரும் கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் உருவாக்கிய காலமே பெருங்கற்காலம் ஆகும் . சில இடங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே (primary buriyal ) ஈமச்சின்னங்கள் வைப்பதுண்டு . சில இடங்களில் வெட்டவெளியில் இறந்த உடலை கிடத்திவிட்டு பின் பல மாதங்கள் கழித்து அவர்கள் எலும்புகளை பொறுக்கி பானையில் ( தாழி ) வைத்து புதைத்து அதன் மேல் ஈமச்சின்னங்கள் வைப்பதும் உண்டு ( secondary buriyal ) . இவ்வாறு தாழி வைக்கும் போது இறந்தவர்கள் பயன்படுத்தி / பயன்படும் பொருட்களையும் வைக்கும் பழக்கமும் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இவ்வாறு இறப்பு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் பெருங்கற்காலம் ஆகும். அதனாலேயே தொல்பழங்கால வரலாற்றில் "பெருங்கற்காலம்" (Megalithic ) மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

   இயற்கையாக கிடைக்கும் பெருங்கற்களைப் பற்றிய அறிவையும் அவற்றை வெட்டி எடுக்கவும் , இடம் விட்டு இடம் நகர்த்தவும் , தூக்கி நிறுத்தவும் , கற்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் தொழில்நுட்ப அறிவியலும் வளர்ந்த காலமிது . இரும்பு உலோகத்தின் பயன்பாட்டையும் அவற்றின் நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் . கட்டிடக்கலை வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெருங்கற்காலம் பெற்றுள்ளது . இக்காலத்தின் வாழ்விட சான்றுகள் குறைவாகவும் ஈமக்காடுகள் மிகுதியாகவும் கிடைக்கின்றன . தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான  ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன . அவை

1) கல்திட்டை ( Dolmen )

2) கல்பதுக்கை ( cist )

3) கல்குவை ( Cairn )

4) குத்துக்கல் ( Menhir )

5) குடைக்கல் ( Umberlla stone )

6) தொப்பிக்கல் ( hood stone )

7) குடைவரை தாழ்வறை ( Rockcut caves )

8) கல்வட்டம் ( cairn circle )

என்பன ஆகும் .

தமிழகத்தில் கிடைக்கும் ஈமச்சின்னங்கலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஈமச்சின்னங்கள் கேரளாவில் கிடைக்கின்றன . ஈமச்சின்னங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாவே உள்ளது . அவற்றை பற்றி காண்போம் . 


கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களைச் சுற்றி குடைவரை தாழ்வரை , குடைக்கல் , தொப்பிக்கல் ஆகிய ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன . தமிழகத்தில் இவ்வகைகள் காணப்படுவதில்லை .  திருச்சூர் மாவட்டம்  , கந்தனச்செரி ( Kandanassery  ) என்னும் ஊரில்  குடைவரை தாழ்வறை ஈமச்சின்னம் காணப்படுகிறது . குடைவரை தாழ்வறை என்பது பாறையை குடைந்து தாழ்வான இடத்தில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்துவதாகும் . இயற்கையான நிலமட்டத்தில் உள்ள கற்பறையை (laterite ) செவ்வக குழியாக குடைந்து வெட்டியெடுக்கப்பட்டு இருப்பதுடன் அக்குழியில் இறங்க படியும் காணப்படுகிறது . இக்குழியின் ஒரு பக்கத்தில் உள்ள  சதுர துவாரத்தின் வழியே உள்ளே சென்றால் ஒரு சிறு அறை போன்ற அமைப்பு உள்ளது . அந்த அறையில் இரு புறமும் திண்ணை போன்ற அமைப்பும் அறையின் மேல் கூரையில் ஒரு வட்ட துவாரம் உள்ளது . இவ்வறை வெளியே உள்ள முன்னறையை விட சற்று தாழ்வாக உள்ளது . இங்குள்ள திண்ணையில் படையல் பொருட்கள் மற்றும் எழும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது . 

வரலாற்று காலத்திற்கு முன்பே பாறையை குடைந்து ஈமச்சின்னங்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது . இவ்விடம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நன்றாக வேலி அமைத்து பாதுகாப்பாக உள்ளது . மழை அல்லதா காலத்தில் சென்றால்  குடைவரை உள்ளே வரை நாம் சென்று காண முடியும் .