Friday, May 6, 2022

மறுகால்தலை பிராமி கல்வெட்டு , திருநெல்வேலி

 சமண மதம் தமிழகத்தில் நீண்ட வரலாற்றை கொண்டது என்பதற்கு இங்கு பரவிக் கிடக்கும் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகள் மற்றும் சமண சிற்பங்களுமே சாட்சி .  சமண துறவிகள் , இயற்கையாக அமைந்த மலை குகைகளில் கற்படுக்கைகளை அமைத்துத் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்  . இவ்வாறான கற்படுக்கைகள் தமிழகத்தில்  அரச்சலூர் , சுக்காளியூர் , கீழ வளவு , அழகர் மலை மற்றும் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கிறது  .   இக்கற்படுக்கையின் அருகே சில இடங்களில் கல்வெட்டுகளை பொறித்தும் உள்ளனர் . இவ்வாறு கல்வெட்டுகளுடன் கூடிய கற்படுக்கை திருநெல்வேலி மாவட்டம் மறுகால்தலை என்னும் ஊரில் உள்ளதைப் பற்றி காண்போம் .

                   திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9km தொலைவில் உள்ளது சீவலப்பேரி என்னும் ஊர் . பராந்தக வீர நாராயணன்  தன் தந்தை ஸ்ரீ வல்லப பாண்டியன் நினைவாக ஒரு பெரிய ஏரியை வெட்டி அதற்கு "ஸ்ரீ வல்லப பேரேரி " என்று பெயரிட்டான் . அதுவே பின்னாளில் மருவி "சீவலப்பேரி" என்று ஆனது . இந்த சீவலப்பேரி ஊரில் இருந்து 2 km தொலைவில் உள்ளது மறுகால்தலை என்னும் கிராமம் . குளம் நிரப்பி மறு கால் பாயும்  முதன்மையான இடம் (தலை) என்பதே "மறுகால்தலை "  என்றானதாக கூறப்படுகிறது .


 தாமிரபரணி , கடனாநதி , சிற்றாறு  ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகே இணைகின்றன .  இவ்வூரின் பாதை முன்னோரு காலத்தில்  திருநெல்வேலியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக இருந்துள்ளது . இவ்வூரில் உள்ள பூவிலுடையார் மலையில் உள்ள சிறு குன்றில் பஞ்சபாண்டவர் கற்படுக்கை என்று அழைக்கப்படும் கற்படுக்கை அமைந்துள்ளது . இக்குகையின் மேற்பகுதியில் பெரிய அளவிலான எழுதுக்களால் வெட்டப்பட்ட பிராமி கல்வெட்டுகள் உள்ளன . இதன் காலம் 2ம் நூற்றாண்டு . தமிழகத்தில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று .

கல்வெட்டு :

" வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் " 

செய்தி : வெண்காசிபன்  என்பவன் இங்குள்ள குகைதளத்தில் கல்படுக்கை அமைத்து கொடுத்தான்  என்பது கல்வெட்டுச் செய்தி ஆகும் . கற்படுக்கையை கஞ்சனம் என்பர் . 


இக்கல்வெட்டு எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் மேலும் கீழுமாக பெரிய அளவிளான எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளது . அளவில் பெரிய எழுத்துக்களாக உள்ளதால் கீழ்லிருந்தே படிக்க முடிகிறது . 

இயற்கையாக அமைந்த இக்குகையில் மழை நீர் குகைகளில் விழாதவாறு கூரை விளிம்பை குடைந்து உள்ளனர் . சீவலப்பேரி செல்லும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு இடமாகும்.








குடைவரை

 1 . மகேந்திரவாடி குடைவரை

மகேந்திரவாடி குடைவரை , காஞ்சிபுரம்

  

பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் வீரத்தில் மட்டுமல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று பல்லவ குலத்திற்கு பெருமை சேர்த்தவர் . இசை , ஓவியம் , நாடகம் இயற்றுதல் என பலவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இவருக்கு பல விருதுப் பெயர்கள் உண்டு . சித்திரகாரப்புலி (ஓவியம்) , சங்கிரணகாதி (இசை) குணபரன் ( குணம் ) என பெயருக்கு ஏற்றார் போல் சிறந்து விளங்கியவர்   செங்கல் , மரம் , உலோகம் கொண்டு கட்டப்படும் கோயில்கள் காலத்தால் நிலைத்து நிற்காததால் நிலையான கோயில்கள் அமைக்க எண்ணி பாறைகளை குடைந்து நிலையான கோயில் அமைத்தவர் . இவர் காலத்தில்தான் தமிழகத்தில் பெரும்பாலான குடைவரைகள் அமைக்கப்பட்டன . மண்டகப்பட்டு , திருச்சி , பல்லாவரம் , வல்லம் , மாமண்டூர் , தளவானூர் , சீயமங்கலம் , மகேந்திரவாடி என பல இடங்களில் குடைவரைகள் அமைத்தவர் . இவற்றில் இவரால் விஷ்ணுவிற்காக எடுக்கப்பட்ட ஒரே குடைவரையை பற்றி இங்கு காண்போம் .

    வாருங்கள் மகேந்திரவாடி குடைவரைக்கு , உங்கள் கண்களை மகிழ்விக்கும் இக்கோயில் நல்லவர்களால் மிகவும் போற்றப்படும் என்ற கல்வெட்டு வரிகள் மூலம் நம்மை வரவேற்கிறார் , மகேந்திரவர்மன் .

        காஞ்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மகேந்திரவாடி என்னும் ஊர் உள்ளது . மகேந்திரவர்மன் , மகேந்திரபுரம் என்னும் ஊரை உருவாக்கி அங்கிருந்த பாறையில் விஷ்ணுவுக்கு "மகேந்திர விஷ்ணு கிரஹம் " என்னும் கோயில் அமைத்ததுடன் இதன் அருகிலேயே ஒரு ஏரியை உருவாக்கி அதற்கு  " மகேந்திர தடாகம் " என்று பெயரிட்டு அழைத்தார்.

 இவர் காலத்தில் இவ்வூர் மிக முக்கிய நகரமாக இருந்து இருக்க வேண்டும் . பொதுவாக குடைவரைகள் எல்லாம் சிறு மலைத்தொடரில் உருவாக்கப்பட்டு இருக்கும் , ஆனால் மகேந்திரவாடி குடைவரை திறந்த வெளியில் உள்ள சிறு குன்றின் பாறையில் குடையப்பட்டுள்ள து . 

"மகேந்திர விஷ்ணு கிரகம் " என்று அழைக்கப்படும் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது . கருவறை , அர்த்த மண்டபம் , முன் மண்டபம் என கோயில் அமைப்புடன் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் . கருவறையில் இருக்கும் நரசிம்மர் பிற்காலச் சேர்க்கையாகும் , பல்லவர் காலத்தில் கருவறையில் திருமால் சித்திரமாக வரையப்பட்டோ அல்லது சுதைச் சிற்பமாகவோ இருந்திருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து . கருவறையின் முன்னே உள்ள அர்த்த மண்டபத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் ஒரே அமைப்பில் ஆடை அணிகலன்களுடன் , கரண்டமகுடம் , முப்புரிநூல், மற்றும் பனையோலைக் குண்டலங்கள் அணிந்து காணப்படுகிறார்கள் . தூண்களைப் பொறுத்தவரை நடுவில் எண்கோணத்திலும் , மேலும் கீழும் சதுர வடிவமாகவும் காணப்படுகிறது . கல்வெட்டுக்கு மேலே காணப்படும் வடிவம் பத்ம பதக்கம் எனப்படும் . குடைவரையின் மேல் பகுதியில் மழை நீர் உள்ளே நுழையாதவாறு வெட்டப்பட்டுள்ளது . 

                                        


                                         


                                           

                                             


 கல்வெட்டுச் செய்தி :

 குணபரன் என்பவரால் மகேந்திரபுரத்தில் , மகேந்திர தடாகக்  கரையில் மகேந்திர விஷ்ணு கிரஹம் எனும் கோயிலை ,முராரி என்னும் இறைவனுக்காக மக்கள் கண்டு போற்றுவதற்காக குடைவித்தான் .

மனித கண்களை மகிழ்விக்கும்  அழகிய இக்கோயில் நல்லவர்களால் போற்றப்படும் என்று வரும் வரிகளை உணர நாம் நேரில் சென்று காணவேண்டும் .

                                         



மகேந்திர தடாகம் :

கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட தடாகம் குடைவரைக்கு அருகே உள்ளது . தடாகம் என்றால் சமஸ்கிருதத்தில் குளம்  . மகேந்திரவர்மனின் பெரும்பாலான  குடைவரைகள் ஏரிக்கரையை ஓட்டியே அமைந்திருப்பது  சிறப்பாகும் . மாமண்டூரில் இருக்கும் "சித்திரமேக தடாகம் " போலவே இங்கும் மகேந்திர தடாகம்  இக்குடைவரைக்கு அருகில் அமைந்துள்ளது . சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான இந்த ஏரி சுற்றி இருக்கும் ஏழு கிராமங்களுக்கும் தற்போதும் பயனளிக்கிறது .

பல்லவர்களின் கலைப்பணிக்கு மற்றுமோரு எடுத்துக்காட்டாக இக்குடைவரை விளங்குகிறது .