கொங்கு என்றால் காடு , பொன் , மணம், தேன் என்று பல பொருள்கள் உண்டு . காடு மிகுந்த நாடு , பொன் நாடு , மணநாடு , தேன் நாடு என்ற பல பொருள்களில் கொங்கு நாட்டிற்க்கு பெயர் அமைந்தது என்பர் .
கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள்நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அதில் ஒன்றான மேல்கூரைப் பூந்துறை நாட்டின் 32 பழம் பெரும் ஊர்களின் ஒன்று பழமங்களம் . இப்போது இது ஈரோடு வட்டத்தில் உள்ளது .
நடுகல் கல்வெட்டில் பெருமையும் பெயரும் பாடல் (வெண்பா) வடிவில் பொறித்திருப்பது தென்னிந்தியாவிலேயே ஈரோடு வட்டம் பழமங்களத்தில் தான் . அனுமநதி புகழ்ந்து கூறுப்பெரும் ஓடையின் தென்கரையில் உள்ள ஊர் . இங்கு 10ம் நூற்றாண்டை சேர்ந்த " கரையகுலச் சொக்கன்" என்பவனின் நடுகல் கோயில் அமைப்பில் உள்ளது . பாடல் மூலம் பழமங்களத்தின் பழைய பெயர் புகழ்மங்களம் என்று தெரிகிறது . மங்களம் என்பதே இவ்வூரின் சிறப்பை உணர்த்தும் .
" வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்ந்த மாற்றலரைச்
சாய்த்தமருள் வென்ற சயம்பெருக - சீர்த்தபுகழ்
நிக்வேணம் கற்பொறிக்கப் பட்டான் கறைய குலச்
சொக்கனேந்த வேவுலகல் தான்"
ARE 217 of 1977 (வெண்பா)
இக்கற்பொறி இரட்சிப்பான் பாதம் என் தலைமேலே என்பது நடுகல் கல்வெட்டாகும் நானாதேசித் திசை ஐயாயிரத்து ஐநூற்றுவருக்கு இங்கு நானாதேசி அடைக்கலம் ஒன்று இருந்துள்ளது . இவ்வூர் பெரிய வணிகர் குழுக்கள் தங்கும் இடமாக இருந்துள்ளது . தொல்பொருட் சிறப்பு வாய்ந்த பல பொருட்கள் கிடைகின்றன . இன்று இந்த நடுகல்லை ஊர் மக்கள் "வேடன் கல் " "வேடம் சாமி" என்று அழைக்கின்றனர்.