Thursday, February 11, 2021

படை வீடு - தமிழ் மகன்

                                                  படை வீடு - தமிழ் மகன்

இது ஒரு வரலாறும் புனைவும் கலந்த வரலாற்று நாவல் . பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான சம்புவராயர்கள் பற்றிய கதை . சோழர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசாக இருந்த சம்புவராயர்கள் , சோழப் பேரரசுவின் வீழ்ச்சிக்குப் பின்  தனி ராஜ்ஜியமாக உருவாகிறார்கள் .  சுமார் 100 ஆண்டுகள் இவர்களின் ஆட்சி இருந்து இருக்கிறது . 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசுவின் உருவாக்கத்தில் இவர்கள் வீழ்ச்சி அடைகிறார்கள்.  இவர்கள் தனி அரசாக இருந்த காலகட்டத்தில் நடந்தவை பற்றிய கற்பனை நாவல் இது .

இந்நூலில்  சுல்தானியர்கள் மதுரை படையெடுப்பின் போது சம்புவராயர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பற்றிய கதை .

மதுரையில் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த வாரிசு போரால் சுல்தானியர்களின் (மாலிக் கபூர்) கவனம் தென்தமிழகத்தின் மீது திருப்பியது .  சுல்தானியர்கள் இங்குள்ள கோயிலின் விலைமதிப்பில்லா நகைகளை கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர் . சுல்தானியரின் நெறிமுறை இல்லாத போர் முறையால் நம் மன்னர்களால் அவர்களை வெல்ல முடியவில்லை . சுல்தானியர்கள் பாண்டிய நாட்டுக்கு கொங்குநாட்டுக்கு சத்தியமங்கலம் வழியாக வந்ததாக கூறி இருக்கிறார் ஆசிரியர்  . ஆனால் அதற்கு தக்க சான்றுகள் தரவில்லை .

சம்புவராயர்கள்  சுல்தானியர் மீது போர்  தொடுக்காமல் , அவர்களாக போருக்கு வந்தால் போர் புரியலாம் என்று இருந்ததாக ஆசிரியர் கூறியுள்ளார் . சுல்தானியரின் படையெடுப்பு பகுதியில் நடந்த போரினால் பாதிக்கப்பட்டு , தஞ்சம் அடைந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க "அஞ்சினான் புகலிடம்" அமைத்து  இருந்ததாக கல்வெட்டு சான்று கொண்டு விளக்கியுள்ளார் . இந்த நூலில் சம்புவராயர்கள் பல கல்வெட்டுச் செய்திகளை கொண்டு கதையை நகர்த்தி உள்ள ஆசிரியர் படை வீடு , ஆறகளூர் விருஞ்சிபுரம் சிதம்பரம் என பல பகுதிகள் அப்போது எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் .  

அக்காலத்தில் இருந்த வலங்கை இடங்கை சாதி பிரிவுகளை பற்றி நிறைய தகவல்கள் தருகிறார் ..

இது வரலாற்று நாவல் என்றாலும் கதையின்  வேகமும்  சுவாரஸ்யமும் குறைவாகவே உள்ளது . வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட  சம்புவராயர்கள் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது .


No comments:

Post a Comment