Tuesday, March 21, 2023

Agrasen ki Baoli, Delhi

 Agrasen ki Baoli

நமது தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிக அழகான பண்டைய கால படிகிணறு தான் அக்ரசென் கி பவுளி (Agrasen ki Baoli ) . வறட்சி காலத்தில் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய அன்றைய மன்னரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த படிக்கிணறு .

            மன்னர்கள் காலத்தில் கோயில்களிலும் மசூதிகளிலும் நீர் மேலாண்மை ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தது . கிணறுகளும் குளங்களும் குடிநீர், குளியல் ஆகியவற்றைத் தவிர்த்து, வெறுமனே நீரைச் சேமித்து வைப்பதற்காகவும் இத்தகைய கிணறுகள் மற்றும் குளங்கள் கட்டப்பட்டிருந்தன. சில கிணறுகளின் மேலே யாத்ரீகர்கள், வழிப்போக்கர்கள், தேசாந்திரிகள் போன்றோர் தங்கிச் செல்வதற்காக அறைகளும் கட்டப்பட்டிருந்தன.

              வரலாற்று சிறப்பு மிக்க இக்கிணறு மகாபாரத காலத்தில் தோன்றியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது . இக்கிணறு Agrasen / Ugrasen என்னும் மன்னரால் கட்டப்பட்டதென்றும் அவருக்கு பின் வந்த அவரின் வழி தோன்றாளாக நம்பப்படும் அகர்வால் (Agarwal ) என்னும் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் புணரமைத்து இந்த அழகிய கிணற்றை உருவாக்கியதாக கூறப்படுகிறது .

                கி.பி 14ஆம் நூற்றாண்டில் டில்லியை ஆட்சி செய்த துக்ளக் மன்னர்கள் யமுனை ஆற்றின் நீரை டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இணைக்க ஏராளமான கால்வாய் கட்டினர். அந்த கால கட்டத்தில் கிணற்றை சுற்றி படிகளுடன் கட்டப்பட்ட கட்டிடம் தான் நாம் இப்போது காண்பது என்ற கருத்தும் நிலவுகிறது . இப்படிகிணறு சுமார் 60 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது . 100க்கும் மேற்பட்ட படிகளில் கீழே இறங்கி சென்றால் தான் இக்கிணற்றை அடையமுடியும் . கிணற்றை சுற்றி அழகிய மூன்று நிலைகளில் கல் சுவர்களும் அவற்றில் சிறிய அறை போன்ற வடிவமும் காணப்படுகிறது . படிகளில் இறங்கினால் கொஞ்சம் குளிர்ச்சியை நாம் உணர முடிகிறது . இக்கிணற்றை வைத்து நிறைய பேய் கதைகள் உலவுகின்றன . எனினும் இந்த இடம் பல திரைப்படங்களில் நாம் கண்டது தான் . முக்கியமாக pk என்ற ஹிந்தி படத்தில் நாம் பார்த்தது நினைவு வருகிறது . இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்தை காண நிறைய வெளிநாட்டு சுற்று பயணிகள் வருகின்றனர் . நாம் நீர் மேலாண்மையில் சிறந்து இருந்ததற்கு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது .











No comments:

Post a Comment