Friday, October 2, 2020

குரங்குநாதர் கோயில் , சீனிவாசநல்லூர் ,திருச்சி

 திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சீனிவாசநல்லூர் என்றழைக்கப்படும் ஊாில்  சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரங்குநாதர் கோயில் அமைந்துள்ளது .

சீனிவாச நல்லூர் குரங்கு நாதர் கோயில் கி. பி.9ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. முதல் முதலாய் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று.சிறு கோயில் என்றாலும் சுற்றி இருக்கும் சிற்பங்கள் சோழர்களின் கலை நுட்பத்தின் உதாரணமாக இருக்கின்றன. அதை விட முக்கியம் சோழர்களின் தக்ஷிணாமூர்த்தி , தெற்கு விமானத்தில். இப்படி ஒரு அழகான மூர்த்தி , இவ்வளவு முந்தைய காலகட்டத்தில் கண்டதில்லை. அதிலும் சுற்றியுள்ள கணங்களின் அம்சங்கள் பொறுமையாக பார்க்க வேண்டியவை. பிட்சாடனார் வடக்கு விமான சுவற்றில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.

துவாரபாலகர்கள் மற்றைய கோயில்களில் போல் அன்றி நேராக பாராது இருபுறமும் ஒரு புறமாக நின்று ஒரு கர்வத்துடன் பார்க்கிறார்கள்.சுற்று சுவற்றில் யாளி வரிசையும் ஒவ்வொரு மூலையிலும் மகர முகங்களும், அவற்றுக்கு கீழே சோழ கல்வெட்டுகளுமாக கோயில் முழுமை பெறுகிறது. கிழக்கு சுவற்றில் பராந்தகனின் நில நிவந்தகளின் கல்வெட்டு இருக்கிறது. 

இக்கல்வெட்டு சாசனத்தை பற்றி குடவாயில் பாலசுப்ரமணியன் "கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் " என்ற புத்தகத்தில் கூறி இருப்பது : சாசனத்தை கூர்ந்து நோக்கும் போது ஸ்ரீ பலி பூஜைக்காக மத்தளம் ,கரடிகை, வெண் கலத்தாளம், பாடகம் ,எக்காளம் ஆகிய இசை கருவிகள் இசைக்கப்பெற்றன என்பதை அறிகிறோம். ஸ்ரீ பலி என்பது மூன்று சந்திப்பொழுதுகளிலும் , அர்த்தயாம பூஜையின் போதும் ,கோயிலில் அட்டதிக் பாலகர்களுக்கும் ,பெரிய பலி பீடத்தின் முன்பும் நடைபெறும் சிறப்பு வழிபாடு ஆகும். திருவிழா காலங்களில் எட்டு திக்குகளிலும் இராஜ வீதிகளில் இப்பலி பூஜை நிகழும். பலி என்பது உயிர் பலியன்று. ஸ்ரீ பலிகொள்ளும் தேவர் அல்லது அஸ்த்ர தேவர் என்னும் செப்புத் திருமேனியை ஒரு பூசகர் தன் தலை மீது சுமந்து ,பலி பீடங்கள் முன்பு நிற்க , அப்போது பலி பீடத்தில் அர்ச்சகர் ஸ்ரீ பலி பூஜை நிகழ்த்துவார். ஓர் ஆள் கையில் விளக்கினை ஏந்தி வர, பலி பீடத்தின் அருகே இசை கலைஞர்கள் நின்றவாறு பண்ணிசையை சிலர் பாட ,சிலர் முத்திரை சங்கு ஊத, சிலர் தோற்கருவிகளையும் ,சிலர் நரம்புக் கருவிகளையும் ,சிலர் துளைக்கருவிகளையும் ,சிலர் உலோக கருவிகளையும் இசைப்பர். திருக்கோயில் நர்த்தகி பலிபீடம்  முன்பு நின்ற வாறு ஹஸ்த முத்திரைகள் காட்டி நடனமாடுவார். திருவாராதனை செய்யும் அர்ச்சகர் அன்னம்,நீர்மலர் ஆகியவற்றைப் பலி பீடத்தின் மீது கைவைத்து ஆகம விதிகளின் படி மந்திரங்கள் சொல்லி ஹஸ்த முத்திரை காட்டி தெய்வத்திற்கு ஸ்ரீ பலியை சமர்ப்பிப்பார். அதனைக் கல்வெட்டுக்கள் ஸ்ரீ பலிபூஜை என்று குறிப்பிடுகின்றன.
















No comments:

Post a Comment