Thursday, February 11, 2021

படை வீடு - தமிழ் மகன்

                                                  படை வீடு - தமிழ் மகன்

இது ஒரு வரலாறும் புனைவும் கலந்த வரலாற்று நாவல் . பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான சம்புவராயர்கள் பற்றிய கதை . சோழர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசாக இருந்த சம்புவராயர்கள் , சோழப் பேரரசுவின் வீழ்ச்சிக்குப் பின்  தனி ராஜ்ஜியமாக உருவாகிறார்கள் .  சுமார் 100 ஆண்டுகள் இவர்களின் ஆட்சி இருந்து இருக்கிறது . 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசுவின் உருவாக்கத்தில் இவர்கள் வீழ்ச்சி அடைகிறார்கள்.  இவர்கள் தனி அரசாக இருந்த காலகட்டத்தில் நடந்தவை பற்றிய கற்பனை நாவல் இது .

இந்நூலில்  சுல்தானியர்கள் மதுரை படையெடுப்பின் போது சம்புவராயர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பற்றிய கதை .

மதுரையில் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த வாரிசு போரால் சுல்தானியர்களின் (மாலிக் கபூர்) கவனம் தென்தமிழகத்தின் மீது திருப்பியது .  சுல்தானியர்கள் இங்குள்ள கோயிலின் விலைமதிப்பில்லா நகைகளை கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர் . சுல்தானியரின் நெறிமுறை இல்லாத போர் முறையால் நம் மன்னர்களால் அவர்களை வெல்ல முடியவில்லை . சுல்தானியர்கள் பாண்டிய நாட்டுக்கு கொங்குநாட்டுக்கு சத்தியமங்கலம் வழியாக வந்ததாக கூறி இருக்கிறார் ஆசிரியர்  . ஆனால் அதற்கு தக்க சான்றுகள் தரவில்லை .

சம்புவராயர்கள்  சுல்தானியர் மீது போர்  தொடுக்காமல் , அவர்களாக போருக்கு வந்தால் போர் புரியலாம் என்று இருந்ததாக ஆசிரியர் கூறியுள்ளார் . சுல்தானியரின் படையெடுப்பு பகுதியில் நடந்த போரினால் பாதிக்கப்பட்டு , தஞ்சம் அடைந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க "அஞ்சினான் புகலிடம்" அமைத்து  இருந்ததாக கல்வெட்டு சான்று கொண்டு விளக்கியுள்ளார் . இந்த நூலில் சம்புவராயர்கள் பல கல்வெட்டுச் செய்திகளை கொண்டு கதையை நகர்த்தி உள்ள ஆசிரியர் படை வீடு , ஆறகளூர் விருஞ்சிபுரம் சிதம்பரம் என பல பகுதிகள் அப்போது எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் .  

அக்காலத்தில் இருந்த வலங்கை இடங்கை சாதி பிரிவுகளை பற்றி நிறைய தகவல்கள் தருகிறார் ..

இது வரலாற்று நாவல் என்றாலும் கதையின்  வேகமும்  சுவாரஸ்யமும் குறைவாகவே உள்ளது . வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட  சம்புவராயர்கள் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது .


கர்நாடகா மாண்டியமாவட்டம் பன்னூர்

ராஜராஜசோழன்கல்வெட்டுகள்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள தொடர்பு  தொன்மையானது. தஞ்சையை ஆண்ட சோழர்கள்  கர்நாடக பகுதியின் மீது படையெடுத்து தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர் . சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் சோழர்கள் அங்கு ஆட்சி செய்துள்ளனர் .  அங்கு சோழர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் , கன்னடம் என இரு மொழிகளிலும் காணப்படுகின்றது . 

மாண்டியா மாவட்டத்தில் உள்ள பன்னூர் என்னும் ஊர் முதலில் வன்னியூரான  ஜானார்த்தன சதுர்வேதி மங்கலம்  என்றும்  , பின்பு  விஜயநகர பேரரசு காலத்தில்  வாகினிபுரம்  என்றும் அழைக்கப்பட்டுள்ளது . 

   மைசூரிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில் ஹனுமந்தீஸ்வரா  என்னும் கோயில் உள்ளது . இக்கோயில்  இப்பகுதியின் மிகப்பழமையான கோயில் ஆகும் . இப்பகுதி முதலில் கங்கர் வசம் இருந்தது போது   ஸ்ரீ புருசா என்னும் கங்கமன்னரால்  இங்கு ஒரு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது . மூலவர் பகுதி மட்டும் கட்டப்பட்டு இருந்த இக்கோயில் , ராஜராஜ சோழரால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள கன்னட கல்வெட்டில் ராஜராஜ சோழரது மெய்க்கீரத்தி ஆன "திருமகள் போல்" என்று ஆரம்பிக்கும் மெய்கீர்த்தி ஏழு வரிவரை உள்ளது . இவற்றுடன் ராஜராஜசோழன் இக்கோயிலின் திருமுற்றம் கட்டுவதற்காக நிலம் கொடையாக கொடுத்த செய்தியும் உள்ளது .   மகாஜன சபையோருக்கும் தத்தனூர் வணிகர்களுக்கும் கோயில் கட்ட நிலம் கொடையாக கொடுத்த செய்தி  தமிழில் உள்ளது .  விஷ்ணுவர்தன் கொடை  கொடுத்த செய்தி கன்னட மொழியில் உள்ளது . அக்கல்வெட்டில் "வடகரை நாட்டு வன்னியூரான ஜனார்த்தன சதுர்வேதிமங்கலம்" என்று இவ்வூர் குறிப்பிடுகிறது . இங்கு கங்கர்கள் , சோழர்கள் , ஹொய்சளர்கள் , விஜயநகர பேரரசு , மைசூர் உடையார்கள் ஆகியோரின் கல்வெட்டுக்கள் உள்ளன . தற்போது இக்கோயில் மிகவும் பராமரிப்பு இல்லாமலும் கல்வெட்டுகள் அனைத்தும் புதைந்த நிலையில் சிதைக்கப்பட்ட நிலையிலும்  உள்ளன . இக்கோயிலின் கல்வெட்டு செய்திகளை  மைசூர் ஆவணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் .













கொடுமணல் கோவில்கள்

 வரலாற்று சிறப்புமிக்க கொடுமண லின் தொன்மை மற்றும் வணிக சிறப்புகளை காண்பதற்கு முன் கொடுமணலில் உள்ள கோயில்கள் மற்றும் அதன் சிறப்புகளைக் காண்போம் . 

        ஒரு பழைய பாடல் ஒன்று கொடுமணலை " ஆலயஞ்செறி கொடுமணல்" என்று கூறுகிறது . நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் கொடுமணலுக்கு உரிய கோயில்கள் மிகுதியாக உள்ளன . 

சிவன் கோயில் :

      நொய்யல் அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உள்ள சிவன் கோயில் பற்றி காண்போம். 

வீரசோழபுர நாடு என்ற பெயருக்கு ஏற்ப இங்கு உள்ள சிவனுக்கு சோழீஸ்வரர் என்று பெயர் . மக்கள் அக்னீஸ்வரர் என்று அழைக்கின்றனர் . இக்கோயிலுக்கு கொங்கு சோழர்கள் திருப்பணி செய்துள்ளனர் . இக்கோயிலில் கல்வெட்டுகள் சிதைந்து விட்டன . இந்த அக்னீஸ்வரர் தற்போது தங்கம்மான் கோயில் அருகே புதிய திருக்கோயிலில் வீற்றிருக்கிறார் . 


பெருமாள் கோயில்:

      பொதுவாக கொங்கு நாட்டில் பெருமாள் கோயில்களை " மேலைத் திருப்பதி"  என அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . இங்குள்ள பெருமாளுக்கு வீர நாராயண பெருமாள் மற்றும் அல்லாளப் பெருமாள் என்றும் பெயர்கள் உள்ளன . இக்கோயிலும் நொய்யல் அணையில் மூழ்கி உள்ள காரணத்தால் இங்கிருந்த பெருமாள் உள்ளிட்ட சிலைகளை தற்போது ஊருக்குள் வைத்து வழிபடுகிறார்கள் . 


மதுரகாளியம்மன் :

                   நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்து உள்ள இக்கோயிலும் அணையில் மூழ்கி உள்ளது . இங்கிருந்த மதுரகாளியம்மன் சிலை தற்போது கொடுமணலில் அத்தனூரம்மன் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது . இந்த அம்மன் சிலை மிக அழகாக அமைந்துள்ளது . 


அத்தனூரம்மன் :

            இக்கோயில் நொய்யல் அருகில் கொடுமணலில் கிழக்கே அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும் . 


தங்கம்மன் கோயில்:

        நொய்யல் ஆற்றின் தென்கரையில் ஆற்றின் அருகே அமைந்து உள்ளது இக்கோயில் . கொடுமணலின் பெருமைக்கும் வரலாற்று சிறப்புக்கும் தங்கம்மன் தான் மூலகாரணமாக விளங்குவதாக நம்பப்படுகிறது.













மலையப்பாளையம் கவுந்தபாடி ஈரோடு

 தொறுபூசல்/ ஊர்பூசல் நடுகல்..

அரசு மேல்நிலைப் பள்ளி ,





கல்குதிரை பாச்சல் ராசிபுரம்

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பாச்சல் என்னும் ஊரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் முன் உள்ள கல்குதிரை .

அழகிய வெளிப்பாடுடன் கூடிய ஒரே கல்லால் ஆன கல்குதிரை .








Wednesday, February 10, 2021

உலகடம் ஓலகடம் , அந்தியூர் பெண்நவகண்டம்

கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றான வடகரை நாடு , பவானி ,அந்தியூர் ஆகிய முக்கிய ஊர்களை உள்ளடக்கிய நாடு ஆகும் .  பவானியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலகடம் என்னும் ஊர் .  


இங்கே மிக பழமையான உலகேஸ்வரர் கோயில் உள்ளது . இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் இவ்வூரை "உலகவிடங்கம்" என்று  குறிப்பிடப்பட்டுள்ளது . "உலகவிடங்கம்" இதுவே மருவி "உலகடம்" என்றும் "ஓலகடம்" என்றும் ஆயிற்று . இங்கு கி . பி 12 - கி. பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர் கல்வெட்டுகள் மற்றும் கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன. கொங்கு சோழரான  வீரராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் , விக்கிரம சோழன் ஆகியோர்களின் கல்வெட்டுகளும் ,  கொங்கு பாண்டியரான சுந்தர பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன . சில கல்வெட்டுகள் சிதைந்த நிலையிலும்  , சில கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின் போது மாற்றி வைக்கபட்டுள்ளது.


கொங்கு நாட்டில் ஆட்சி செய்த சோழர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் வீரராஜேந்திர சோழர் .  இவர் கொங்கு சோழமன்னர்களின் பெரும்புகழ் பெற்றவர் . வட கொங்கு , தென் கொங்கு என இரு கொங்கு பகுதியையும்  ஆண்டவர் என்று குறிப்பிடப்படுபவர் . இவரது கல்வெட்டுகள் சில உள்ளன .


இக்கோவிலில் மூன்று நடுகற்கள் உள்ளன . ஆநிரை மீட்டல் , சதி கல் மற்றும் பெண் நவகண்டம் ஆகிய நடுகற்கள் உள்ளன . வேறு எங்கும் காணப்படாத பெண் நவகண்டம் கொடுக்கும் சிற்பம் இங்கு உள்ளது இக்கோயிலின் மற்றுமொறு சிறப்பு ஆகும் .














கொடுமணல்

 ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்த கொடுமணலில் 

தற்போது இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த கொடுமணலில் கிடைத்த அகழாய்வுப் பொருட்களைக் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுவதற்கு முன்னால் இந்த சங்ககால தொழில் நகரான கொடுமணல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று இதனைக் கண்டுபிடித்த முதுபெரும் தொல்லியல் அறிஞர் திரு. புலவர் இராசுவிடம் கேட்டறிந்தவற்றை அவரிடமே கேட்டறிவோம்.


ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18யை ஒட்டிய புதன் கிழமை கொடுமணல் அருகில்  உள்ள தங்கம்மன் கோயிலில் விழா எடுப்பது வழக்கம் . அவ்வாறே1979ம் ஆண்டு விழா நடந்த போது சிறப்பு விருந்தினராக அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. தியனேஸ்வரர் அவர்கள் கலந்து கொண்டார் . அவர் புதிதாக பொறுப்பேற்ற காரணத்தால் என்னையும் (புலவர்.இராசு) அவருடன் அழைத்து சென்றார் . அங்கு ஆட்சியருக்கு இரண்டு மணி நேரம் வேலை இருந்த காரணத்தால் நான் மிதிவண்டி எடுத்துக்கொண்டு நொய்யல் ஆற்றின் வழியே சிறிது தூரம் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஆற்றின் கரையில் சில சிவப்பு கறுப்பு ஓடு , பாசி மற்றும் சங்குகள் ஆகியவற்றை கண்டெடுத்து பத்திரப்படுத்தினேன். அது குறித்து அப்போது எதுவும் தெரியாததால் அதற்கு அடுத்த வாரம் மதுரை நாயக்கர் மஹாலில் நடந்த தொல்லியல் மாநாட்டில் திரு . நாகசாமி ஐயாவிடம் காண்பித்த போது அவர் " ராசு இது ஒரு அரிய பொக்கிஷம் " எங்கு கிடைத்தது என்று கேட்டு அறிந்து கொண்டார் . பின்னர் கொடுமணல் வந்து சிறு சோதனை (trial bit) நடத்தி உறுதிபடுத்தினார். இவை யாவும் சங்ககால பானை ஓடுகள் என்றும் இவ்விடம் சங்ககால தொல்லியல் மேடு என்பதையும் உறுதி செய்தார்.


அதன் பிறகு நான் அப்போதைய ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியின் தாளாளர் முத்தையாவுடன் கலந்து பேசி அவருடன் இணைந்து 30 மாணவியர்களை அழைத்துக்கொண்டு சிறு சுற்றுலா போல உணவு தண்ணீர் எடுத்துக்கொண்டு கொடுமணல் நோக்கி பயணப்பட்டோம். அங்கு மாணவியர்களுக்கு எப்படி பட்ட பொருள்களை எடுத்துத் தரவேண்டும் என்று பயற்சியளித்ததால், அக்குழந்தைகள் கடுகு போல பச்சை பாசியை கூட எடுத்துக்கொடுத்தனர் . அங்கு கிடைத்த மிக அரிய கல்மணிகள்  தற்போது கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது .


அதன் பிறகு 1985,1986,1989,1990,1997 ஆகிய ஆண்டுகளில் தமிழ் பல்கலைகழகம் , தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை , சென்னை பல்கலைகழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆகியவை தனித்தனியேவும் இணைந்தும் அகழாய்வுகளை நடத்தினர் .