Showing posts with label மரபுச் சின்னங்கள். Show all posts
Showing posts with label மரபுச் சின்னங்கள். Show all posts

Tuesday, July 30, 2024

CHETAK HORSE ( SCOOTER )

 முகலாய பேரரசர் அக்பர்(Akbar ) தனது ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்திய போது (வட இந்தியாவை ) பெரும் இடையூராகவும் , வீரமிக்க எதிராளிகளாகவும் விளங்கியவர்கள்  ராஜபுத்திர வம்சத்தினர்கள் . ராஜபுத்திர  மன்னர்களில் இரண்டாம் உதய் சிங்கும் அவர் மகன் மஹாராணா பிரதாப் சிங்கும் அக்பருக்கு கட்டுப்பட மறுத்த பெரும் வீரர்கள் . கி பி 15ம் நூற்றாண்டில் ராஜபுத்திர வம்சத்தில் தோன்றிய இரண்டாம் உதய்சிங் சித்தொகரை  (Chittogarh ) தலைநகராக கொண்டு மேவாரை ( Mewar ) ஆட்சி செய்து வந்தார் . மேவார் பகுதி என்பது இன்றைய ராஜஸ்தானின் ஒரு பகுதியாகும் .  முகலாய பேரரசர் அக்பர் 1567 ஆம் ஆண்டு தனக்கு கட்டுப்பட மறுத்த சித்தோகர் கோட்டையை முற்றுகையிட்டார் . மிகப் பெரிய கோட்டை மற்றும் ராஜபுத்திரர்களின் வீரத்தாலும் இப்போர் சுமார் நான்கு மாதங்கள் ( 23 October 1567 – 23 February 1568) நடந்தது , இறுதியில்  அக்பர் சித்தோகர் (chittogarh) கோட்டையை கைப்பற்றினார் . இப்போரில் உதய் சிங் உயிர்தப்பியதோடு ஆரவல்லி மலைப் பகுதிக்கு தப்பினார் . மேவாரின் தலைநகர் சித்தோகர் கைப்பற்றப்பட்ட போதிலும் இந்த ராஜ்யத்தின் பெரும்பகுதி உதய் சிங்கின் ஆதிக்கத்தில் இருந்தது . எனவே  தலைநகரை இழந்த உதய் சிங் புதிய தலைநகரை உருவாக்கினார் . அவர் பெயரில் உருவாக்கப்பட்ட தலைநகரே இன்றைய உதய்பூர் ( Udaipur ) . நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்த உதய் சிங் நகர் முழுவதும் பல ஏரிகளை உருவாக்கினார் . இன்றும் பல ஏரிகளை கொண்டு இந்நகரம் விளங்குவதால் ஏரிகள் நகரம் ( City Of Lakes )  என்று இன்றும் புகழ்ப்படுகிறது .    இரண்டாம் உதய் சிங்கின் மறைவுக்கு பின் அவர் மகன் மஹாராணா பிரதாப் சிங் ஆட்சிக்கு வந்தார் . இவர் 1540 ம் ஆண்டு மே 9ம் தேதி ராஜஸ்தானின் கும்பல்கரில் ( Kumbhalgarh / Kumbhalmer ) பிறந்தவர் . இவரின் தலைமையில் மேவார் சிறப்புற்று  விளங்கிய போது அக்பர் மீண்டும் மேவாரை பிடிக்க  படையெடுத்தார் . ஜூன் 18ம் தேதி 1576 ம் ஆண்டு அம்பரை சேர்ந்த மான் சிங்( Man Singh Of Amber ) என்பவர் தலைமையில் அக்பரின் படை  கிளம்பியது . அரவல்லி ( Aravalli )மலைத்தொடரில் இருந்து 40 km தொலைவில் அமைந்த உதய்பூரை பிடிக்க ஹால்டிகட் (Haldighati ) என்னும் மலையில் உள்ள கணவாய் வழியாக படை வந்தது . இம்மலை முழுவதும் மஞ்சள் நிற மண் காணப்படுவதால் , ( haldi ) ஹால்டி என்றால் இந்தியில் மஞ்சள் என்ற பொருளில் ஹால்டிகாட்  என்று இம்மலை அழைக்கப்படுகிறது . அக்பரின் பெரும் படையை மஹரானா பிரதாப் சிங்கின் சிறிய படை வீரத்தோடு எதிர்கொண்டது . ராணா பிரதாப் சிங்கின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்டது அவரது சேடக் ( CHETAK ) குதிரை  . மார்வாரி குதிரை இனத்தை சேர்த்த சேடக் குதிரை அழகு , திறமை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டு இருந்தது . இப்போரில் முகலாய படைத்தளபதியான மான் சிங்கை கொல்ல ராணா முயன்ற போது ராணா படுகாயமுற்றார் . அவரது சேடக் குதிரையும் காலில் காயமுற்றது எனினும் தன் தலைவர் காயமுற்று சுயநினைவு இழந்த நிலையில் அவரை சுமந்து கொண்டு போர் களத்தை விட்டு பகைவர்களிடமும் சிக்காமல் ஓடி , ஆற்றை கடந்து அவரை கொண்டு சேர்த்துவிட்டு கீழே விழுந்து மடிந்து இறந்தது . சரியான நேரத்தில் ராணா பிரதாப்பை மீட்டு , அவர் உயிரை பகைவரிடம் இருந்து காப்பாற்றியது . தன் வலியை பொருட்படுத்தாமல் காயப்பட்ட கால்களுடன் ஓடி தன் எஜமானை காப்பாற்றிய நிம்மதியுடன் இறந்தது . சுமார் 4 மணி நேரமே போர் நடத்தி அக்பர் வென்றாலும் , அவர் இப்போரில் முழுவெற்றி அடையாத்ததற்கு சேடக் குதிரையே காரணம் . அன்றில் இருந்து இக்குதிரை பற்றி பல நாட்டுப்புற கதைகள் உலவுகின்றன . பல நூற்றாண்டுகளாக சேடக் குதிரை கதைகளின் நாயகனான திகழ்கிறது . ராணா பிரதாப் சிங் , தன் உயிரை காப்பாற்றிய சேடக் குதிரையை புதைத்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் (நவீன நடுகல் ) எழுப்பியுள்ளார் . சேடக்கை புதைத்த இடத்தில் சிறு மேடை அமைத்து அதன் மேல் மண்டபம் போல் அழகான மாடம் அமைத்துள்ளனர் . அதன் நடுவே ஒரு அடிக்கு, நான்கு புறம் கொண்ட சிறு கல் தூண் அமைத்து, ஓவ்வொரு பக்கத்திலும் சிறு சிற்பம் அமைத்துள்ளனர் . இச்சின்னமும் , ஹால்டிஹட் போர் நடத்த இடமும் தற்போது ராஜஸ்தான் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .  இக்குதிரையின் வீரமும் விசுவாசமும் புத்திசாலித்தனமும் இன்றும் போற்றப்படுகிறது .  இக்குதிரையின் நினைவில் நம் இந்திய அரசாங்கம் ராணுவ வானூர்திக்கு சேடக் ஹெலிகாப்டர் ( Chetak Helicopter ) என்றும் , ஒரு தனியார் நிறுவனம் தன் இரு சக்கர வாகனத்திற்கு   (Chetak Scooter ) சேடக் ஸ்கூட்டர் என்றும் பெயர் வைத்து மரியாதை செய்துள்ளது . ராணா பிரதாப் சிங், ஹல்டிகட் போர் நடந்து சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அக்பர்  கைப்பற்றிய சித்தோகர் கோட்டை மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றினார் . இவர் ஆட்சியில் மேவார் ராஜ்ஜியம் சிறப்புற்று விளங்கியது .

ஜனவரி 19ம் தேதி 1597ம் ஆண்டு ராணா மறைந்தாலும் அவரையும் அவரின் சேடக்  குதிரையையும் உதய்பூர் மக்கள் மறக்கவில்லை . ராஜபுத்திர மன்னர்கள் பல பேர் இருந்தாலும் வரலாற்றில் இன்றளவும் ராணா பிரதாப் சிங்கிற்கு தனியிடம் உண்டு .  உதய்ப்பூர் சாலை நடுவே சேடக் குதிரையும் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது . இன்றும் ராணாவின் மன உறுதியையும் முகலாயர்களுக்கு அடிபணியாத வீரத்தையும் மறக்காத மக்கள் அவரின் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர் .தங்கள் குழந்தைகளுக்கு பிரதாப் என்று இன்றும் பெயர் சூட்டி , அவரைப் பற்றி பல கதைகள் பேசி மகிழ்கின்றனர் .  மேலும் மஹாரானா பற்றி அறிந்துகொள்ள அருங்காட்சியகம் அமைத்து அதில் அவரின் வாழ்க்கை வரலாறு சொல்லும் ஓவியக்காட்சியும் , ஒளி ஒலி காட்சியும் , அவர் பயன்படுத்தி பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது . இங்கு அவரைப்போன்றும் , அவர் சேடக் குதிரைமேல் அமர்ந்து முகலாயர்களிடம்  சண்டை போடும் காட்சிகள் அனைத்தும் பெரிய சிலைகளாக  அமைத்துள்ளனர் . நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வீர வரலாறு இது .

                                                                              CHATAK HORSE

                                                  

          

                                                                           CHATAK SAMADHI

                 


                                                                                                                                                                                                                             










                                                              

                                                               
                                                                    HALDIGHAT

                                            


                                                 

                                                 MAHARANA PRATAB MUSEUM

                                                

                                            

                                                       

                                             







AKBARI MASJITH , AMBER , JAIPUR

 இந்து மன்னர் இஸ்லாமிய மன்னருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததுடன் ஒரு மசூதியும் கட்டினார் என்ற வரலாற்றை அறிந்து கொள்ளலாம் . ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 13 km தொலைவில் அம்பர்கோட்டைக்கு (Amber Fort ) அருகில் ஜமா மஸ்ஜித் (Jama Masjid ) என்னும் பழமையான மசூதி அமைந்துள்ளது . கிபி 1569 ஆம் ஆண்டு அக்பரின் உத்தரவை ஏற்று ராஜா பர்மால் ( Raja Bharmal ) என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது . வட இந்தியாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவாக்க முடிவு செய்த அக்பர் , இரண்டு யுக்திகளை பயன்படுத்தினார் . பகைவர்களை வீரத்தாலும் மற்ற நாட்டவர்களை அன்பாலும் வெல்ல திட்டமிட்டார் . போர் புரிவதால் இருபுறமும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதால் அதை தவிர்க்க விரும்பி , திருமண உறவாலும்  எல்லைகளை விரிவாக்க முடிவு செய்தார் . அதுவும் குறிப்பாக ராஜபுத்திர மன்னர்களுடன் அவர் திருமண உறவு ஏற்று போர்கள் இன்றி தனது எல்லையை பாதுகாக்க முடிவு செய்தார் . அக்பர் , இஸ்லாமியர் ராஜபுத்திரார்களோ இந்துக்கள் . ஆனால் அக்பர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை . ராஜ்ஜியத்தை விரிவாக்க மட்டுமே எண்ணினார் . அம்பர் சமஸ்தானத்தை முகலாய ராஜ்யத்துடன் இணைக்க திருமணமே சிறந்த வழி என முடிவு செய்தார் . மேவார் மன்னர் ராணா உதய்சிங் தவிர மற்றவர் ராஜபுத்திர மன்னர்கள் திருமண உறவுக்கு ஒப்புக்கொண்டனர் . இதன் முதல் முயற்சியாக அக்பர் , அம்பர் ராஜ்ஜியத்தின் 22வது ராஜபுத்திர மன்னரான ராஜா  பர்மால் (1498- 27 சன 1574 ) என்பவரின் மகளான ஹீரா கன்வாரியை மணம் புரிந்தார் .  அக்பர் திருமணத்திற்கு முன்பும் ஹீரா கன்வாரியை மதம் மாற சொல்லவில்லை அதுமட்டுமின்றி அரண்மனையில் இந்துவாக வாழவும் , பூஜைகள் செய்யவும் அனுமதி கொடுத்ததுடன் சில பூஜைகளில் அவரும் கலந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது .  செப் 20 ,1569ம் ஆண்டு ஹீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது . அக்குழந்தையே பின்னாளில் ஜஹாங்கீர் என்ற புகழ் பெற்ற முகலாய மன்னராவார் . அம்பரின் மன்னரான ராஜா பர்மால் தன் மருமகனான அக்பரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பர் கோட்டைக்கு அருகில் மஸ்ஜித் ஒன்றை கட்டி அதற்கு அக்பரின் பெயரே சூட்டியுள்ளனார் . " அக்பரி மஸ்ஜித் " என்றும் , " ஜமா மஸ்ஜித் " என்றும் அழைக்கப்பட்டுள்ளது . மஸ்ஜித் என்பது இஸ்லாமியர் அனைவரும் ஒன்றுகூடி இறைவனை தொழுகை செய்யும் இடம் ஆகும் .இதனையே தமிழில் பள்ளிவாசல் என்றும் அரபுமொழியில் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது . ராஜபுத்திர ராஜ்ஜியத்தில் இஸ்லாமியருக்கும் தொழுகை செய்ய இடம் வேண்டும் என்று நோக்கத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது . மசூதியின் நுழைவாயில் தாண்டி சென்றால் முகப்பில் ஏழு வளைவுகளைக் கொண்டு அவற்றின் மைய வளைவு மற்ற வளைவுகளை விட பெரியதாகவும் உள்ளது . இம்மசூதி இன்னும் பயன்பாட்டில் உள்ளது . இக்கட்டிடம் ராஜஸ்தான் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

                                             


                                         








                                          

                                                           

                                                            

                                                           


        

Friday, September 15, 2023

Hattu Madha , Narkonda , himachal Pradesh

Hattu Madha , Narkonda , Himachal Pradesh

இந்தியாவின் மலை மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா , ஆங்கிலேயர் ஆட்சியின்போது நம் நாட்டின் கோடைகால தலைநகராக விளங்கியது . அப்போதுமட்டுமல்லால் தற்போதும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தளமாக உள்ளதால் நெரிசலான இடமாக மாறி உள்ளது . 

சிம்லாவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  ஒரு சிறிய நகரம் நார்கண்டா . இது இந்தியா - திபெத் சாலையில் அமைந்துள்ள அமைதியான , அதிக சுற்றுலா பயணிகள் பயணிக்காத இடமாக உள்ளது .  நார்கண்டாவில்  இருந்து 8km தொலைவில் உள்ளது ஹட்டு மாதா கோயில் . இக்கோயிலை பற்றி காண்போம் .

சிம்லாவில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றான ஹட்டு சிகரத்தில் ஸ்ரீ ஹட்டு மாதா என்னும் காளி கோயில் அமைந்துள்ளது .  ராவணனின் மனைவியாக மண்டோதரி தான் ஹட்டு மாதா  என்றும் நம்பப்படுகிறது . 

 இக்கோயில் காண்பதற்கு சீன கோயில் போல காட்சியளிக்கிறது . கண்ணாடி மற்றும் கோயிலை சுற்றி முழுவதும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் நம் இதிகாசங்களான  இராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கின்றன . இக்கோயிலை சுற்றி உள்ள மலைகளில் ஆப்பிள் மரங்களால் சூழப்பட்டுள்ளது . சூரிய அஸ்திமானத்தை காண்பதற்கு ஏற்ற இடமாக இத்தலம் விளங்குகிறது .













Chandigarh , Rock Garden , Nek chand

 சண்டிகர் :

பஞ்சாப் , ஹரியானா என இரு மாநிலங்களின் தலைநகர் சண்டிகர் அது மட்டுமல்லாமல் , இந்தத் தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் விளங்குகிறது .  இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் ஒன்றாக விளங்கும் சண்டிகர் , ஜவஹர்லால் நேருவின் "கனவு நகரம் " என்றும் போற்றப்படுகிறது . 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம்  பெற்ற பின் உருவாக்கப்பட்ட நகரமாகும் (planned city ) . இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாப்பின் அப்போதைய தலைநகரான லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது . இந்தியா வசம் இருந்த பஞ்சாபின் கிழக்குப் பகுதிகளுக்கு தலைநகருக்கான தேவை ஏற்பட்டது . மார்ச் 1948 இல் இந்திய அரசுடன் கலந்த ஆலோசித்த பஞ்சாப் அரசு , புதிய தலைநகருக்கான இடமாக அம்பாலா மாவட்டத்தில் உள்ள சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியை தேர்ந்தெடுத்தது .  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவகர்லால் நேரு இத்திட்டத்தை ஆர்வத்துடன் ஆதரித்து அதனை செயல்படுத்துவதில் தொடர்ந்து அக்கறை காட்டினார் . ஏப்ரல் 2 , 1952 இல் எதிர்கால தேசத்தின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இந்தப் புதிய தலைநகர் இருக்கட்டும் என அறிவித்தார் . 

புதிய தலைநகருக்கு " சண்டிகர் " என பெயர் சூட்டப்பட்டது . இது பஞ்சாபியர்களின் வீர உணர்வின் அடையாளமாகவும் , சண்டி தேவியின் பெயருடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது . புதிய தலைநகரை உருவாக்க இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை கலைஞர் லீ கார்பூசியர் (Le Corbusier ) . இவரின் யோசனையால்  தான் புதிதாக உருவாக்கப்பட்ட சண்டிகர் நகரம் நன்கு திட்டமிடப்பட்டு , வரையறுத்தப்பட்ட பகுதிகளாகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் பல செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது . இரு மாநிலங்களின் தலைநகரமாக இருப்பதால் இரு மாநிலங்களின் நிர்வாக தலைமையகம் இங்குதான் அமைந்துள்ளது . எனவே இங்கு அதற்கு தேவையான அகலமான சாலைகள் , திட்டமிடப்பட்ட கட்டிடங்கள் , நீர் நிலையங்கள் , மருத்துவம் , தபால் அலுவலகம் , சந்தை போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்டுள்ளது .  ஒவ்வொரு செக்டரில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூங்கா , கடைகள் , ஹோட்டல்கள் , சமூதாய கூடங்கள் , பள்ளிகள் என தனித்தனி பகுதிகள் உருவாக்கபட்டுள்ளது . அனைத்து கட்டிடங்களும் இரண்டு அடுக்குகள் மட்டுமே உள்ளதால் போக்குவரத்து நெரிச்சல் இல்லை ,  மிதிவண்டிகளுக்கு என பெருஞ்சாலையில் தனியே  இடம் ஒத்துக்கப்பட்டுள்ளதால் இங்கு மிதிவண்டியில் செல்பவர்கள் அதிகம் அதுமட்டுமில்லாமல் மிதிவண்டிகள் ஆங்காங்கே வாடகைக்கு நிறுத்தப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் எந்த பகுதிகளிலும் யார் பெயரிலும் வீதியோ தெருவோ இல்லை . செக்டர் எண் மற்றும் வீட்டின் எண்ணை கொண்டே நாம் செல்லும்  நண்பர்கள் வீட்டை அடையமுடியும் . நீளமான மற்றும் அகலமான நேரான சாலைகள் , சந்திப்புகளில் அழகான ரௌடானாக்கள் அதில் தெளிவாக எழுதப்பட்ட செக்டர் எண்கள் , சாலையின் இரு புறமும் பெரிய பெரிய மரங்கள்  மற்றும் அழகிய பூக்கள் , போக்குவரத்து நெரிசல் மற்றும் ஹாரன் சத்தமில்லாத சாலைகள் என ஊரே அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது . இது இந்தியாவின் கனவு நகரமாக விளங்குகிறது . இங்கு சுற்றுலா தலங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமான சுற்றுலா தலமான "ராக் கார்டன்" (Rock Garden ) பற்றி காண்போம் .

Rock Garden :

Nek Chand :

நெக் சண்ட என்பவர் டிசம்பர் 15ஆம் தேதி 1924 ஆம் ஆண்டு  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள (Barian Kalan) பரியன் காலன்  என்னும் இடத்தில் பிறந்தவர் . 1947ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் அப்பகுதி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியானது . அதனால் அவர் இந்திய  பகுதிக்கு குடியேறினார் . அப்போது பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக புதிதாக ஒரு பெரு நகரம் வடிவமைக்க இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்விஸ் கட்டிடக்கலைஞர் லீ கார் (Le Corbusier ) . புதிய தலைநகர் உருவாக்கத்தில் சந்துவுக்கு பொதுப்பணி துறையில் சாலை ஆய்வாளராக வேலை கிடைத்தது . 1958 ஆம் ஆண்டு தொடங்கி தனது ஓய்வு நேரத்தில்  நகரை ஒட்டி உள்ள காட்டில் பழைய பொருட்களை சேர்க்க தொடங்கினார் . சண்டிகர் நகரம் கட்ட பயன்பட்ட பொருட்களின் கழிவுகளைக் கொண்டு சாண்டால் உருவாக்கப்பட்ட தோட்டமே ராக் கார்டன் .

சுமார் 12 ஏக்கரில் உடைந்த பாட்டில்கள் , கண்ணாடிகள் , பீங்கான்கள் , வளையல்கள் , ஓடுகள், உலோக கம்பிகள் என பல தூக்கி எறியக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பூங்கா கட்டப்பட்டுள்ளது .  இதில் கட்டிட கழிவுகளைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி , வாய்க்கால்கள் மற்றும் பல சிற்பங்களை கொண்டுள்ளது .  பல நூறு எண்ணிக்கையிலான விலங்கு சிற்பங்கள் , மனித உருவ சிற்பங்கள்  எல்லாம் மறு சுழற்சி செய்யப்பட்ட பல வகையான உலோகத்தின் மீது கான்கிரீட் முலாம் பூசப்பட்டு உள்ளது .

        உருவங்கள் மற்றும் மண்பாண்டங்கள் , பீங்கான் துண்டுகள் , கண்ணாடி பாட்டில்கள் , தொப்பிகள் என அறிய வகையான நிராகரிக்கப்பட்ட பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது . இந்த ராக் கார்டன் உலக அளவில் புகழ் பெற்று சுற்றுலா தலமாக விளங்குகிறது . இன்று உள்ள சுற்றுச்சூழலில் பழையதைக் கொண்டே உருவாகும் பொழுதுபோக்கு பூங்கா என்பது அவசியமான ஒன்றே .