Showing posts with label சமணம். Show all posts
Showing posts with label சமணம். Show all posts

Wednesday, February 22, 2023

காஞ்சிபுரம் , திருப்பருத்திக்குன்றம் சுவர் ஓவியங்கள்

காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற ஊரில்
திரைலோகிய நாதர் கோயில் மற்றும் சந்திர பிரபா கோயில் என
இரண்டு கோயில்கள் உள்ளன . கிபி 1387 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கோயில்களுக்கும் பொதுவாக அமையும் வகையில் அகலமான மகா மண்டபம் ஒன்று விஜயநகர மன்னர் புக்கனது அமைச்சர் இருகப்பா என்பவரால் கட்டப்பட்டு இருக்கிறது இதனை சங்கீத மண்டபம் என்றழைப்பர் .
வாமன முனிவரின் (மல்லிஷேணர்) என்ற சமண முனிவர் சமஸ்கிருதம் , பிராகிருதம் , தமிழ் மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார் . இவரின் சீடரான புஷ்பசேன முனிவரிடம் , விஜய நகர அரசரான மூன்றாம் புக்கரிடம் படத்தலைவரும் மந்திரியுமான விளங்கிய இருகப்பர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . குருவின் ஆணைக் இணங்க திருப்பருத்திக்குன்றத்தில் சங்கீத மண்டபம் கட்டினார் . 61 அடி நீளம் கொண்ட இம்மாண்டபத்தில் ஒரு தூணில் உள்ள உருவம் இவர் உருவம் என்று கூறப்படுகிறது . இவை புதிய விஜயநகர பாணியில் கட்டப்பட்டு இருந்தாலும் இங்கு காணப்படும் ஓவியம் சிறப்பு மிக்கது . ஓவியக் காட்சியை காணும் முன்பு தீர்த்தங்கரர்கள் பற்றியும் சிறிது அறிந்து கொள்வோம் .

சமண சமயத்தில் தீர்த்தங்கரர்களே முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள் . 24 தீர்த்தங்கரர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தோன்றி மக்களுக்கு போதனை வழங்கினர் . இம்மத்தை பொறுத்த அளவில் இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது , அவை முழுமை பெற்ற ஆன்மா , முழுமை பெற ஆன்மா என்று இருவகையாக பிரிக்கப்படுகிறது . . தேவர்கள் , மனிதர்கள் , விலங்குகள் , தாவரங்கள் , பறவைகள் , காற்று , நீர் ஆகியவை முழுமை பெற ஆன்மாக்கள் என்ற வகையை சேரும் . இவற்றில் தீர்த்தங்கரர்கள் முற்பிறவி வினைகளால் மனிதனாகப் பிறந்து ,பின் தன் வினைகளை கலைத்து முழுமை பெற்ற ஆன்மாவாக உருவெடுக்கிறார்கள் . சமண சமயத்தின் கோட்பாடு படி பிற உயிர்க்கு செய்யும் தொண்டு மூலம் முற்பிறவி கர்ம வினைகளை போக்க முடியும் . எனவேதான் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை முக்கிய வினையாக கருதப்படுகிறது . சமண சமயத்தில் தீர்த்தங்கரர்கள் அனைவரும் மனிதனாகப் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வினையை அகற்றிய பின் தீர்த்தங்கரர்களாக உருவெடுகிறார்கள் . தீர்த்தங்கரர்கள் அனைவரும் அரச குடும்பத்தில் பிறந்து , கல்வியறிவு மற்றும் போர்க்கலைகள் கற்று , திருமணம் மற்றும் மக்கள் செல்வம் பெற்று சிறந்த வாழ்க்கை நடத்தியவர்கள் . மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ஒதுங்காமல் அவர்களுக்கு அறவழிப்படுத்தி துன்பம் போக்கி நல்வழிப்படுத்தி நல் வாழ்க்கை வாழ வழி படுத்துவார்கள் . தீர்த்தங்கரர்களின் பிறப்பு என்பது அவரின் தாய்க்கு முன்னரே அறிவிக்கப்படும் . அதாவது 14 மங்களப் பொருட்களை தாய் தன் கனவில் காண்பதன் மூலம் அவரின் தாய்விற்கு தீர்த்தங்கரரின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது . அரச குடும்பத்தில் பிறந்தாலும் குதிரைகள் , யானைகள் ஆகியவற்றுடன் , பயணத்திற்கான பல்லாக்கு குடை மற்றும் பரிவாரங்களை துரக்கிறார்கள் . இவ்வாறு பிறந்த இரண்டாவது தீர்த்தங்கரரான ரிஷப தேவரின் வாழ்க்கையை முழுச்சித்திரமாக இக்கோயிலில் வரையப்பட்டுள்ளதை காண்போம் .
ரிஷப தேவரின் முற்பிறப்பு பற்றியும் , பெற்றோர் குறித்தும் அவர் வளர்ந்து தீர்த்தங்கரராக மாற்றம் பெற்ற பின் ஏற்படும் நிகழ்வுகள் முதலியவற்றை வலது பக்கத்திலிருந்து இடது புறமாக தொடர்ச்சியான முறையில் தீட்டியுள்ளனர் . நாதி மகாராஜாவுக்கும் அவர் மனைவி மாரு தேவிக்கும் பிறந்தவர் தான் ரிஷப தேவர் . இவரின் பிறப்பை கனவு மூலம் அவரின் தாய்க்கு அறிவிக்கப்பட்டது .தாயின் கனவில் வரும் 14 பொருட்களில் முதல் பொருளாக காளை வந்ததால் இவருக்கு ரிஷப தேவர் என்று பெயர் . இவரின் பிறப்பின் போது தேவலோக மகளீர் பணிவிடை செய்தனர் . தேவர்களால் இவருக்கு ஜென்ம அபிஷேகம் செய்யப்பட்டது . இவர் சுமந்தா , சுமங்கலா என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார் . இளவரசராக இருந்த இவர் அரசனாக அரியணை ஏறினார் . இறையருள் பெற்ற அரசனாக திகழ்ந்த இவர் மக்களுக்கு பல நன்மைகளை செய்தார் . இவர் ஆட்சியில் நாடு தலைசிறந்த நாடாக திகழ்ந்த போதும் ,மக்களின் துன்பம் கண்டு வருந்தினார் . அப்போது அவர் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து தன் நாட்டை தன் மக்களுக்கு பங்கிட்டு அளித்துவிட்டு , காட்டிற்குச் சென்று கடும் தவம் மேற்கொன்டார் . பின்பு பல இடங்களுக்கு சென்று மக்களின் வாழ்க்கை சிறக்க அறவழிகளை போதித்தார் . இவரின் முற்பிறவி வினைகள் நீங்கி ஞானம் பெற்றார் . தேவர்கள் இவரின் போதனைகள் மக்களுக்கு சென்று சேர சமவசரணம் அமைத்தனர் .

இவற்றை ஓவியர் தொகுப்பில் நாம் காணலாம் . ஒரே உருவத்தில் எட்டு தேவர்கள் ரிஷப தேவர் முன் வரிசையாக நிற்கின்றனர் . ரிஷப தேவர் வலது கையை நீட்டியவாறு மேடையின் மேல் உள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் . ஒரு பணியால் அவருக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் .தேவர்கள் ரிஷப தேவரிடம் அவர் உலகப்பற்றை துறக்க வேண்டி நேரம் வந்துவிட்டது என்பதை வலியுறுத்தும் நிகழ்வை ஓவியம் சித்தரிக்கிறது .


அடுத்த படம் ரிஷப தேவர் அரண்மனையை விற்று வெளியேறி துறவனும் மேற்கொள்ள பள்ளத்தில் அவர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார் . அரசு சின்னங்களான கொடி , குடை , ஆளவட்டம் ஆகியவற்றை சுமந்து கொண்டு பணியாளர்கள் குழு ஒன்று செல்கிறது . இரண்டு இசைக் கலைஞர்கள் , ஒரு நாதஸ்வரம் ஒதுபவர் மற்றும் மேளம் அடிப்பவர் ஆகியோர் ஊர்வளத்தின் முன்னே வழி நடத்திச் செல்கின்றனர் . அவர்கள் காட்டை அடைந்ததை உணர்த்துவதற்காக படங்களில் மரங்களின் வரையப்பட்டிருக்கிறது .


அடுத்து மூன்றாவது ஓவியத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் வரையப்பட்டுள்ளன . இடது பக்கம் ரிஷப தேவர் ஒரு மேடையில் அமர்ந்திருக்கிறார் . அவர் கலைத்து ஒதுக்கிய ஆடைகள் ஒரு பக்கம் குவியலாக வைக்கப்பட்டுள்ளது . ஒருவர் துறவியாவதற்கு செய்ய வேண்டிய மிக முக்கிய சடங்கான தன் தலைமுடியை தானே பிடுங்கிக் கொள்ளும் பஞ்ச முத்தியயா என்னும் வலியும் வேதனையும் நிறைந்த சடங்கை தானே செய்து , ஐந்து கைப்பிடி அளவு தலைமுடியை பிடுங்குகிறார் . தேவர்கள் ரிஷப தேவரின் முழு தலைமுடியை அகற்றாமல் விட்டு விட கேட்டுக் கொண்டார்கள் . ஒரு துறவிக்கு தனக்கென எந்த ஒரு விருப்பமும் இருக்கக் கூடாது ,அதே நேரத்தில் அன்பிற்குரியவர்கள் சொல்வதை மறுக்கவும் கூடாது என்பது சமணத்தின் கொள்கை . எனவே ஒரு கற்றை முடியை அகழாமல் குடுமியாக விட்டார் . எப்போதும் அவர் அருகில் இருந்து அவரை பின்பற்றும் கச்சா , மகா கச்சா இருவரும் மற்றும் 4000 மன்னர்கள் தலைவர்களும் அவருடன் துறவருடன் மேற்கொண்டனர் சமண பாரம்பரிய படி இவர்தான் ஆரம்பத்தில் துறவறம் ஏற்றவர்கள் ரிஷப தேவரிடம் காணப்பட்ட மன உறுதியும் வலிமையும் இவர்களிடம் இல்லை குளிர்காலம் வந்தபோது மரப்பட்டையை பயன்படுத்தி தங்களுடைய மூடிக்கொண்டனர் . பசி ஏற்பட்டபோது காய்களை பசித்தனர் .



அடுத்து நான்காவது ஓவியத்தில் இரு நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. ரிஷப தேவர் இரு கரங்களை தொங்கவிட்ட சுயோத்சரக தோற்ற நிலையில் , நிமிர்ந்து நின்று ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் . அவருக்கு பணி செய்ய இரு தேவர் அவர் பாதத்தருகே அமர்ந்திருக்கிறார்கள். துறவறம் ஏற்ற கச்சா , மகா கச்சா புதல்வர்கள் இருவரும் தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்து வந்து , அவர்களது துறவுக் கோலத்தைக் கண்டு ,நாட்டை தங்களுக்கு உரிய பங்கினை பிரித்து தரும்படி கேட்கின்றனர் . துறவரும் மேற்கொள்ள காரணமாக அமைந்த நிகழ்ச்சி அவர்களுக்கு விளக்குகிறார்கள், சகோதரர்கள் இருவரும் ரிஷப தேவரை தங்களுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்க வேண்டிக் கொள்கிறார்கள் . இந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ள மரங்களின் தோற்றம் மாறுபடுகிறது . இந்த நிகழ்ச்சி ஒரு தென்னந்தோப்பில் நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது . தலையின் பின்பக்கம் படம் விரித்த பாம்பு காட்சியளிக்க நாக அரசனாகிய தர்மேந்திரன் , ரிஷபதேவரின் தியானத்தை கலைக்க வேண்டாம் என்று கூறுகிறார் . . தற்போது ரிஷப தேவரின் நாட்டை ஆண்ட கொண்டிருக்கும் பரதரிடம் அவர்களை அழைத்துச் செல்வதாக கூறுகிறார் . பரதர் மூலம் நாட்டை பெற்ற பின்னர் தன்னைத் தலைவனாக இருக்க வேண்டும் என்று தர்மேந்திரா கூறுகின்றார் .நாமியும் விதாமியும் அதை ஏற்க மறுத்து , ரிஷபதேவர் ஒருவரே தங்கள் தலைவர் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட தர்மேந்திரர் மகிழ்ச்சியடைத்து விண்ணுலகில் பல நகரங்களை அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதாகச் சொல்கிறார். வலப்பக்கத்து ஓவியம் தர்மேந்திரா தனது புஷ்பக விமானத்தில் அவ்விருவரையும் விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லும் காட்சியைச் சித்தரிக்கின்றது.


ஐந்தாவது பிரிவில் இடப்பக்கத்தில் நாமியின் முடிசூட்டு விழாவும் வலப்பக்கத்தில் வினாமியின் முடிசூட்டு விழாவும் வரையப்பட்டுள்ளன. இவ்விரு விழாக்களும் இரு வேறு நாடுகளின் தலைநகரங்களில் நடைபெறுகின்றன. விழா மேடையைச் சுற்றிலும் கோட்டை உள்ளது. மேகங்கள் மேல் தேவர்கள் நிற்கும் காட்சி விழாக்களின் தெய்வீகத் தன்மையை உணர்த்துகிறது.




ரிஷபதேவர் நகரத்திற்குத் திரும்பி வந்து சார்யா எனப்படும் முறையில் மௌனமாகப் பிச்சை ஏற்றதை ஆறாவது பிரிவு விவரிக்கிறது. ரிஷபதேவர் ஒரு திகம்பர முனிவர். எனவே அவர் பிச்சைப் பாத்திரம் எதனையும் கைகளில் ஏற்றிச் செல்ல முடியாது. ஏந்திய கரங்கள் கொள்ளும் அளவு உணவிலை உண்டு வாழ்ந்தார். அவர் நகரத்துக்குள் வந்தபோது ஓர் அரசனுக்குப் பரிசாக அளிக்கப்படத்தக்க யானைகள், குதிரைகள், ஆடைகள் ஆகியவற்றையும் இளம்பெண்களையும் பக்தர்கள் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ரிஷபதேவர் அவை எதையும் பெற்றுக்கொள்ளாமல் காட்டிற்குத் திரும்பினார். பல ஓவியங்களில் அவருக்குக் கொண்டு வரப்பட்ட காணிக்கைப் பொருள்களும் அவற்றைக் கொண்டுவந்தவர்களும் வரையப்பட்டுள்ளனர். வலப்பக்கத்தில் ரிஷபதேவர் காட்டிற்குத் திரும்பி வந்து தனது தியானத்தைத் தொடர்ந்த காட்சி தீட்டப்பட்டுள்ளது.
ரிஷபதேவருக்கு அவருக்கு ஏற்ற உணவை வழங்க தேவர்கள் முடிவு செய்தனர். அவருக்கு உணவளிக்கும் பெரும் பேற்றிற்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஸ்ரேயன்குமாரன்." தேவர்கள் அவன் ஒரு விந்தையான கனவு காணும்படி செய்தனர். அவன் அக்கனவைத் தன் சகோதரனிடம் கூறியபோது, அவன் ஒரு ஜோதிடனிடம் கண்டு கனவின் விளக்கத்தைக் கேட்க ஆலோசனை கூறினான். ஜோதிடர் ரிஷபதேவர் பிச்சை ஏற்க வருகிறார் என்பதைக் கனவு உணர்த்துவதாகக் விளக்கினார்.

ஏழாவது ஓவியத்தில் , ஸ்ரேயன்குமாரன் அரண்மனையில் இருக்கும் காட்சி அவன் தன் படுக்கையில் படுத்திருக்கிறான். ஒரு பணியாள் விசிறி வீச, மற்றொருவன் கால்களைப் பிடித்து விடுகிறான். அடுத்த ஓவியம் அவன் தன் சகோதரனைக் கலந்தாலோசிக்கும் காட்சி. வலது பக்கம் கடைசியில் ஜோதிடர் கனவுக்கு விளக்கம் கூறும் காட்சி வரையப்பட்டுள்ளது.




எட்டாவது ஓவியத்தில் , இடப்பக்கத்தில் பணியாளன் ஒருவன் ரிஷபதேவரின் வருகையை அரண்மனையில் இருக்கும் ஸ்ரேயன் குமாரனுக்கும் அவனுடைய சகோதரனுக்கும் அறிவிக்கும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. வலப்பக்க ஓவியம் சகோதரர்கள் ரிஷபதேவருக்கு உணவு வழங்குவதையும் பணிவுடன் அவரை வணங்குவதையும் சித்தரிக்கின்றது. சமணத் துறவியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற கரும்புச் சாற்றை ஸ்ரேயன்குமாரன் ரிஷபதேவருக்கு அளிக்கிறார்.



source தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு

திருப்பருத்திக்குன்றம் , காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் , தமிழகத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள பழமையான நகரமாகும் . " கோவில் நகரம் " என புகழப்படுவதற்கு ஏற்ப பல வரலாற்று சிறப்புமிக்க அழகிய கட்டிடக்கலையுடன் கூடிய கோயில்களை தன்னகத்தை கொண்டுள்ளது . இந்தியாவின் புனித நகரங்களில் சிறந்ததாக திகழ்கிறது . கி . பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது . அதனாலேயே "பல்லவர் கட்சி" என்று அழைக்கப்பட்டது . பல்லவ பேரரசர் சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் , ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறினான் . ஆனாலும் அவர்கள் எல்லா மதத்தையும் ஆதரித்தனர் என்பதற்கு சான்றாக பல்லவர்களின் தொண்டை நாட்டில் சைவம் , வைணவம் , பௌத்தம் மற்றும் சமணக் கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன . இங்கு சிவகாஞ்சி , விஷ்ணு காஞ்சி , பௌத்த காஞ்சி , சமண காஞ்சி என நான்கு மண்டலங்கள் இருந்ததாக கூறப்படுகிறது . இதில் சமண காஞ்சி பற்றி அறிந்து கொள்ளும் முன் சமண மதம் தோன்றியது பற்றி சிறிது அறிந்து கொள்வோம் .

வர்த்தமான மகாவீரர் (கி.மு 599) வைஷாலிக்கு அருகில் உள்ள குந்தாகிராமத்தில் பிறந்தார் . அவர் துறவறம் மேற்கொண்ட பதின்மூன்றாவது ஆண்டில் மிக உயர்ந்த அறிவைப் பெற்றார் . ஜைன / சமண மதம் எளிமையான வாழ்க்கை மற்றும் அகிம்சை (அகிம்சை) பற்றியது. ஜைன மதம் என்பது 24 தீர்த்தங்கரர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையாகும், ரிஷபநாதர் முதல் தீர்த்தங்கரர் , பார்ஷ்வநாதர் இறுதி அல்லது இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் . அவர்களில் கடைசி மற்றும் மிக முக்கியமானவர் மகாவீரர் ஆவார். மகத ஆட்சியாளர்களான பிம்பிசாரும் , அஜாதசத்ருவும் மகாவீரரின் போதனைகளால் மிகவும் கவரப்பட்டனர். ஜைன மதத்தின் மூன்று கொள்கைகள் சரியான நம்பிக்கை, சரியான அறிவு மற்றும் சரியான செயல். 
                                 வட இந்தியாவில், தன நந்தா, சத்ரகுப்த மௌரியா மற்றும் காரவேலா போன்ற ஆட்சியாளர்களால் இம்மதம் ஆதரிக்கப்பட்டது. அவர்களுடன் சமண மதத்தை பின்பற்றுபவர்கள் பலர் கர்நாடகாவில் குடியேறினர். அவர்கள் வழியே சமணம் தமிழகம் வந்தடைந்தது . காலப்போக்கில், தமிழகத்தில் சமண மதம் ஒரு முக்கிய நம்பிக்கையாக மாறியது . சமணத்தின் செல்வாக்கை தமிழக நிலப்பரப்பு முழுவதும் இன்றும் காண முடியும். இந்தியாவில் திகம்பர் சமணர்களுக்கென உள்ள நான்கு முக்கிய ஸ்தலங்களில் காஞ்சியில் உள்ள திருப்பருத்திகுன்றமும் ஒன்றாகும். மற்ற மூன்றும் டெல்லி, கோலாப்பூர் மற்றும் பெனுகொண்டாவில் உள்ளன. இனி திருப்பருத்திக்குன்றம் பற்றி காண்போம் .
                      காஞ்சி அருகே பாலாற்றங்கரையில் உள்ளது திருப்பருத்திகுன்றம் , இது முன்னாளில் காஞ்சி மாநகரின் சமணக்காஞ்சி என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதி ஆகும் . " பொற்குன்றம் " என்ற பெயரே " பருத்தி குன்றம் " ஆயிற்று என்றும் , அருணகிரி என்னும் வடமொழிப் பெயரும் இதற்கு வழங்கியதாக கூறப்படுகிறது . இதில் அருணன் என்பதும் பரிதி என்பதும் சூரியனை குறிப்பதாகும் . பரிதிக்குன்றம் என்பதே பருத்திக் குன்றம் ஆயிற்று என்று கூறப்படுகிறது . இச்சிறப்பு வாய்ந்த ஊரில் தற்போது திரைலோகிய நாதர் கோயில் மற்றும் சந்திர பிரபா கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளன .
கி.பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்லவ மன்னன் சிம்ம விஷணுவால் கட்டப்பட்ட இக்கோயில் முதலில் செங்கல் கற்றலியாக இருந்ததாகவும் பின் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது .
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள பள்ளன் கோயில் என்னும் இடத்தில் கிடைக்கப்பட்ட செப்பேட்டில் ( பள்ளன் கோயில் செப்பேடு ) இக்கோயிலை பற்றிய குறிப்பு வருகிறது . பள்ளன் கோயில் செப்பேட்டின் தமிழ் பகுதியில் " அமண் சேர்க்கை பருத்தி குன்றில் வஜ்ர நந்தி குரவர்க்கு வெண்குன்ற கோட்டத்து பெருநகர நாட்டு " என்பதன் மூலம் அந்த ஊர் பற்றிய குறிப்பை அறியலாம் . சிம்ம வர்மன் ( கி.பி 540) தன் ஆறாம் ஆட்சி ஆண்டில் வெண்குன்றம் பகுதியில் வாழ்ந்த வஞ்சிர நந்தி என்ற சமணத் துறவிக்கு நிலதானம் வழங்கிய செய்தியை இச்செப்பேடு தெரிவிக்கிறது . இதனைக் கொண்டும் இக்கோயிலின் பழமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது .

சந்திரபிரபா கோயில் :
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கட்டிடக்கலையின் அடிப்படையில் கூறப்படுகிறது . பல்லவர்களின் அடையாளமாக விளங்கும் சிங்கத் தூண்கள் அதிகமாக உள்ளன . கருவறை , அர்த்தமண்டபம் , சிறிய முகம் மண்டபம் மற்றும் ஒரு சிறிய பிரகாரம் உள்ளன. சமணத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திர பிரபா தியான கோலத்தில் காணப்படுகிறார் . அவரின் உருவம் வெள்ளை நிற சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டுள்ளது . அவரின் இரண்டு பக்கங்களிளும் இரண்டு சாமரம் தாங்கிகள் காணப்படுகிறார்கள் . இவை 18 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் .


திரைலோக்கிய நாதர் கோயில் :
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் மூன்று சன்னதிகள் அமைந்துள்ளன . இவற்றில் முதன்மையான சன்னதி மகாவீரருக்கானது . இப்பகுதி "வர்த்தமானேஸ்வர் " என்றும் அழைக்கப்படுகிறது . மற்ற இரண்டு சன்னதிகளில் மகாவீரருக்கு வடக்கில் புஷ்ப தந்தர் சன்னதியும் , தெற்கில் தரும தேவி சன்னதியும் அமைந்துள்ளது. கருவறையின் தற்போதைய அமைப்பும் அர்த்தமண்டபம் , முகம் மண்டப அமைப்பும் சோழர் காலத்தை சேர்ந்தவை . பனிரெண்டாம் நூற்றாண்டில் முற்பகுதியில் ஒன்றாம் குலோதுங்க சோழரால் கருவறை புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . கருவறை செங்கற்கலால் கட்டப்பட்டும் எஞ்சியவை கருங்கல் கட்டிடமாகவும் அமைந்துள்ளது . கருவறையின் பின்பகுதி அரைவட்ட தூங்கானை மாடக் கோயிலாக காணப்படுகிறது

.திரிகூடபஸ்தி:
திரிகூடபஸ்தி பிரிவில் மூன்று சன்னதியில் உள்ளன . அவற்றில் பத்மபிரபர் , வாசு புஜ்யர் , மற்றும் பார்சுவநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன . இவற்றில் இரண்டு சன்னதிகள் கிழக்கு நோக்கியவாறு அவற்றின் அர்த்தமண்டபமும் , முகமண்டபமும் தனித்தனியாக உள்ளன . கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிற இவற்றின் பாசநாதர் கருவறை சிறிதாகவும் மற்ற கருவறைகள் பெரிதாகவும் அமைந்துள்ளது . இவையும் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .


சங்கீத மண்டபம் :
கிபி 1387 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கோயில்களுக்கும் பொதுவாக அமையும் வகையில் அகலமான மகா மண்டபம் ஒன்று விஜயநகர மன்னர் புக்கனது அமைச்சர் இருகப்பா என்பவரால் கட்டப்பட்டு இருக்கிறது இதனை சங்கீத மண்டபம் என்றழைப்பர் . வாமன முனிவரின் (மல்லிஷேணர்) என்ற சமண முனிவர் சமஸ்கிருதம் , பிராகிருதம் , தமிழ் மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார் . இவரின் சீடரான புஷ்பசேன முனிவரிடம் , விஜய நகர அரசரான மூன்றாம் புக்கரிடம் படத்தலைவரும் மந்திரியுமான விளங்கிய இருகப்பர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . குருவின் ஆணைக் இணங்க திருப்பருத்திக்குன்றத்தில் சங்கீத மண்டபம் கட்டினார் . 61 அடி நீளம் கொண்ட இம்மாண்டபத்தில் ஒரு தூணில் உள்ள உருவம் இவர் உருவம் என்று கூறப்படுகிறது . இவை புதிய விஜயநகர பாணியில் கட்டப்பட்டு இருந்தாலும் இங்கு காணப்படும் ஓவியம் சிறப்பு மிக்கது .

 
குரா மரம் :
இக்கோயிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிக்கு பின்னால் பழமையான மற்றும் புனிதமான குரா மரம் ஒன்று காணப்படுகிறது . "தென்பருத்திக் குன்ற மர்ந்த கொங்கார் தருமக் குரா " என்னும் புகழப்படுகிற இம்மரத்தின் அடியில் முனிவர்கள் மூவர் அமர்ந்து நெடுந்தவம் செய்தனர் என்றும் அதனால் இம்மரம் தெய்வத்தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது . இம்மரம் நன்றாக செழிப்பாக வளர்ந்தால் அரசும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது .

சுவர் ஓவியங்கள் :
சங்கீத மண்டபத்தில் சுவர்கள் மற்றும் கூறைகளில் காணப்படும் அழகிய சுவரோவியங்கள் கோயிலின் முக்கிய சிறப்பம்சமாகும் . இந்த ஓவியங்கள் விஜயநகர் காலத்தில் வரையப்பட்டது . பின்பு மங்கிப்போன சில ஓவியங்களை மீண்டும் செப்பனிடப்பட்டு தற்போது நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது . ஸ்ரீ சேனாவின் கதை மற்றும் அவரின் மறுபிறப்புகள் , ரிஷபத்தின் முழு வரலாறு , வர்த்தமானர் வரலாறு , நேமிநாத புராணம் ,கிருஷ்ணனின் கதை , அம்பிகையின் புராணக்கதை போன்ற சமண மதத்தின் பல்வேறு புராணங்களை சித்திருக்கின்ற ஓவியங்கள் இருக்கின்றன .

கல்வெட்டுக்கள்
1) கி.பி 1199 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்கனின் 21 ஆம் ஆட்சியாண்டில் வழங்கப்பட நிலக்கொடை பற்றிய குறிப்பு கோயிலின் முன்னுள்ள மண்டபத் வாசலின் கீழே குறிப்பிட்டுள்ளது . தற்போது காஞ்சிபுரத்திற்கு மேற்கே உள்ள அம்பி என்ற ஊர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் " எயிற்கோட்டத்து அம்பை " என்று அழைக்கப்பட்டுள்ளது . இவ் ஊரில் 20 வேலி நிலத்தினை கோயிலுக்கு பள்ளிச்சந்த இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது . பள்ளிச் சந்த என்பது கோயிலுக்கு வழங்கப்படும் வரியில்லாத நிலம் ஆகும் . மண்டியங்கிழான் குலோத்துங்க சோழ காடுவெட்டி என்பார் தமது குருவாகிய சந்திர கீர்த்தி தேவனின் நலத்திற்காக 20 வேலி நிலம் வழங்கிட மன்னனிடம் வேண்டினான் . அவனின் வேண்டுகோளை ஏற்று வழங்கப்பட்ட நிலம் பற்றிய குறிப்பு இக்கல்வெட்டில் உள்ளது .
2) கி.பி 1200 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 22ம் ஆட்சியாண்டில் கோயிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம் புணரமைக்கப்பட்ட செய்தி கோயிலின் கருவறை முன் உள்ள சுவற்றில் காணப்படுகிறது . மேலும் இவ்வூர் மகாசபையார் 25 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு நிலம் ஒன்றினை இறை நீக்கிய செய்தி உள்ளது .

3 )கிபி 1234 ஆம் ஆண்டு மூன்றாம் ராஜராஜனின் பதினெட்டாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்ட கொடை பற்றி கல்வெட்டு சாந்தி மண்டபத்தின் மேற் சுவரில் உள்ளது . தியாக சமுத்திரப் பட்டையார் என்னும் வீமரைசர் என்பவர் , இக்கோயின் இறைவன் செம்போற் குன்றாழ்வார் வழிபாட்டிற்காக வேண்டி காலியூர்க் கோட்டத்து விற்பேட்டு நாட்டு காண்ணிப்பாக்கம் என்னும் ஊரில் நெடுநாள் பயிர் விளையாமல் இருந்த நிலத்தினை பள்ளிச் சந்தமாக கொடையடைத்துள்ளார் .

4 ) கி.பி 1236ம் ஆண்டு மூன்றாம் ராஜாஜனின் 20ம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட கொடை பற்றிய கல்வெட்டு கோயிலின் பொருட்கள் பாதுகாக்கும் அறையின் வடக்கு சுவரில் உள்ளது .
தியாகசமுத்திரப் பட்டையார் என்கிற வீமரைசர் மூன்றாம் ராஜராஜன் காலத்தில் இப்பகுதியின் அதிகாரியாக திகழ்ந்த போது இக்கோயிலில் பொருட்கள் வைக்கும் அறையை கட்டுவித்தான் . மேலும் இவருக்கு தாம்பூலம் மடித்து கொடுக்கிற (அடைக்காயமிது இடுகிற) வீம வடுகன் என்னும் பிராமணன், நென்மேலி என்னும் ஊரில் தனக்கு கூலியாக கிடைத்த நெல்லினை இந்நாயனாருக்கு காலை திருப்பள்ளி எழுச்சி செய்து படைக்கப்படும் திருவமுதுக்காக அளித்துள்ளான்.

5) கி.பி 1243 - 79 பிற்கால பல்லவ மன்னன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை "தமிழ்ப்பல்லவர் கோன் " என்று கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது . மூன்று முனிவர்கள் பயன்படுத்திய கல்லைக் கொண்டு குரா மரத்தின் மேடை அமைத்த செய்தி உள்ளது .
6) கி.பி 13ம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டில் கோயிலில் வாழ்ந்த மூன்று முனிவர்களுக்கு 'குரா' என்னும் மரம் குன்றாமல் நிழல் தந்தது போன்று மன்னனின் செங்கோல் ஆட்சி சிறப்புடன் நடைபெற வழிகாட்டியது இம்மரம் என்பதனையும் கூறுகிறது .
7 ) கி.பி 13ம் நூற்றாண்டில் காடவர் ஆட்சியில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை அழகிய பல்லவன் என்று அழைக்கப்பட்ட செய்தியும் அவன் அமைத்துக் கொடுத்த திருமதில் பற்றிய செய்தியும் உள்ளது .

8) கிபி 1362 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசுர் அரிகரராஜன் குமாரன் புக்க ராஜன் அவர்களின் நலன் வேண்டி தண்டநாயக்கரின் மகன் அமைச்சர் இருகப்பர் என்பவர் திரிலோக நாதர் கோயிலுக்கு பூசை , சாலை , திருப்பணி போன்றவற்றிற்காக மகேந்திரமங்கலம் என்னும் ஊரினை தானமாக வழங்கியுள்ள செய்தி மடப்பள்ளி வடக்கு சுவரில் கிரந்த கலந்த தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது .
9) கி.பி 14 ஆம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் இரண்டாம் புக்கனின் அமைச்சராகிய இருகப்பரின் சமூயகுருவான புஷ்ப சேனரது விருப்பத்திற்கு இணங்க
சங்கீத மண்டபத்தினை கட்டிய செய்தி உள்ளது .

11) கி .பி 1517 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயல்நாட்டு நகரம் காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றத்து திரைலோக்கிய நாதர் கோயில் ஸ்ரீ பண்டாரத்திலிருந்து குருக்கள் அனந்த வீரிய வாமண முனிவர் மற்றும் பொற்குன்றங் கிழார் தேவாதி தேவர் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் சேவகப் பெருமாள் மகன் அரியபுத்திரரிடம் 120 பணம் பெற்றுக்கொண்டு மனை மற்றும் நிலத்தால் வந்த பங்கினை விற்று கொடுத்துள்ளனர் என்று செய்தி கோயிலின் வலது சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது .

12 ) கி.பி1517 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்தில் முசிறுப்பாக்கம் என்ற திருமலை தேவிபுர அக்கிரகாரத்தை மக்களின் நலன் வேண்டி கோயிலுக்கு உரிய கோதுகை என்னும் ஊரினை கொடுத்து அதற்கு மாற்றாக உவச்சேரி என்ற பெறப்பட்ட செய்தி காணப்படுகிறது .

13 ) கிபி 15 -16 ம் நூற்றாண்டில் ஜின காஞ்சியில் உள்ள திரைலோக்கிய நாத சுவாமி பூசைக்காக 2000 குழிநிலம் விடப்பட்ட செய்தி உள்ளது .





















Tuesday, November 8, 2022

குன்னத்தூர் / வரிச்சியூர் பிராமி , மதுரை

                       மதுரை , தமிழகத்தின் பழம்பெரும் நகரமாகும் . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பெருமைக்குரிய தலைநகரமாக விளங்கியதுடன் இன்றும் தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக விளங்குகிறது . சங்க காலத்தில் இருந்து பல்வேறு சமய நம்பிக்கைகளை தன்னுள் கொண்டு விளங்கும் நகரம் இது . மதுரையின் வரலாற்றோடு தொன்மையான சமண சமயத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது . சமண மதத்தின் தோற்றத்தைப் பற்றியும் அது தமிழகத்தில் பரவியது பற்றியும் காண்போம் .

                         சமண மதமானது கி.மு ஆறாம் நூற்றாண்டில் பீகாரில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக தென்னமும் நோக்கி பரவியதாக கருதப்படுகிறது . சமணர்கள் என்றால் துறவிகள் என்று பொருள் . துறவு நெறியை வலியுறுத்திய மதம் சமண மதம் ஆகும் . அடைக்கலம் , அன்னதானம் , மருத்துவம் , கல்வி ஆகிய நான்கு தானங்களையும் வலியுறுத்தியது இம்மதம் . சமண சமயத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் , அவர்களில் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் என்கிற ஆதிநாதர் , 24வது தீர்த்தங்கராக மகாவீரர் தோன்றினார் . இவரின் இயற்பெயர் வர்த்தமானர் ஆகும் . இவரே சமண சமயத்தை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது .

                        மகாவீரர் கி.மு 527 ம் ஆண்டு , தன் 72 ஆவது வயதில் வீடுபேறு அடைந்தார் . இவர் வழிவந்த மாணவர்கள் பலரும் இவரை பின்பற்றியதுடன் இவரின் கொள்கையை நாடு முழுவதும் பரப்பினர் . இவர் வழிவந்த மாணவர்களுள் ஒருவர்தான் பத்திரபாகு முனிவர் . இவரே பேரரசர் சந்திரகுப்த மவுரியரின் குருவாக விளக்கினார் . 

கி மு 4 ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தை தழுவினார் என்றும் மகத நாட்டில் பெரியதோர் பஞ்சம் ஏற்பட இருப்பதை முன்னரே அறிந்த பத்திரபாகு முனிவர்  தன்னுடைய சீடர்கள் 12,000 பேருடன் தென்னகம் நோக்கி புறப்பட்டார் . சந்திர குப்தரும் அரசு பதவியைத் துறந்து தன் குருவுடன் தென்னாடு நோக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது . இன்றைய மைசூர் பகுதிக்கு அருகே உள்ள சரவணபெலகொலா என்னும் இடத்தில் இவர்கள் தங்கினர் என்றும் அங்கேயே சந்திர குப்த மவுரியர் வீடு பேறு அடை ந்ததாகவும் கூறப்படுகிறது . அங்கிருந்த காலத்தில் பத்திர பாகு தன் சீடரான விசாகாச்சாரியார்  என்பவரை சோழ , பாண்டிய நாடுகளுக்கு சமணத்தை பரப்பும்படி அனுப்பியதாக கூறப்படுகிறது . இவ்வாரே பாண்டிய நாட்டிற்கு சமண சமயம் பரப்பியதாகவும் , ஒரு காலத்தில் சமணர் பல்லாயிரம் பேர் வாழ்ந்த ஊர்களாக பாண்டிய நாடு விளங்கியதாக அறியப்படுகிறது . சமணம் மதுரையில் சிறப்புற்று இருந்ததற்குச் சான்றாக சமண தடயங்களை இன்றும் நாம் காண முடிகிறது .

 மதுரையை  சுற்றி உள்ள மலைகளில் உள்ள இயற்கையாக அமைந்த குகைகளில் சமண துறவிகள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக  கற்படுக்கைகள் மற்றும் அங்கு அத்துறவிகளின் பெயர் அல்லது கற்படுக்கை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டாக   கிடைக்கின்றன . மொத்தம் 13  இடங்களில் 30க்கும் மேற்பட்ட தமிழி கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன . கி.மு 300 முதல் கி.பி 300 வரை சமணர்கள் வாழ்ந்து இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன .  குன்னத்தூர்/ வரிச்சியூர் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள குகைதளத்தை பற்றி இங்கு காண்போம் .

மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சுமார் 15km தொலைவில் வரிச்சியூர் என்னும் சிறு கிராமம் அமைத்துள்ளது . இங்கு காணப்படும் சிறு குன்றில் இயற்கையாக அமைந்த பெரிய குகை ஒன்று காணப்படுகிறது  . சுமார் 30 பேர் தங்கும் அளவில் காணப்படும் இக்குகை வடக்கு நோக்கி அமைந்துள்ளது . பல கற்படுக்கைகள் வெட்டப்படுள்ளது . குகையின் மேல் மடிப்பில் நீர் வடி விளிம்பு செதுக்கப்பட்டுள்ளது . இந்த குகையில் வாழ்ந்த மக்களுக்கு மன்னர்களும் வாணிபர்களும் , பொது மக்களும் உதவி செய்துள்ளனர் என்பதற்கு இங்கு காணப்படும் 3 தமிழி கல்வெட்டுகளே சாட்சி . நீர் விளிம்பின் மேலும் கீழுமாக காணப்படும் இம்கல்வெட்டுகள் மூன்றும் கி.மு 2ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் .

கல்வெட்டு 1:

" பளிய் கொடுபி..."

இங்குள்ள குகையில்  பள்ளி அமைத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது . ஆனால் அவரின் பெயர் காலப்போக்கில் சிதைந்துள்ளது .

கல்வெட்டு 2 :

'..டா....  ஈதா வைக ன நூறுகல நெல்..."

நூறு கலம் நெல் வழங்கப்பட்டதை கூறும் இக்கல்வெட்டில் வழங்கப்பட்டவரின் பெயர் சிதந்துள்ளது .நூறு என்ற எண் அளவை குறிக்கும் காலத்தால் முதல் கல்வெட்டு இதுவே . கலன் என்பதும் அளவுப்பெயர் . அதேபோல் நெல்லை தானமாக கொடுக்கப்பட்டத்தை சொல்லும் குகைக்கல்வெட்டு இதுவே ஆகும் .


கல்வெட்டு 3 :

‘இளநதன் கருஇய நல் முழு உகை'

இக்குகையை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டத்தை கூறுகிறது . 

பாறையில் அமைந்த இடைப்பட்ட பகுதியை இன்று குகை  என்கிறோம் . கல்வெட்டு வழக்கில் குகை என்பது துறவு நிலை மேற்கொள்வோர் வாழும் பாறைகள் மிகுந்த உள்ள இருப்பிடத்தை குறிக்கும் . சமண துறவிகள் பெரும்பாலும் மலைப் பாறைகளில் அடித்தளத்தை செதுக்கி படுக்கையாக பயன்படுத்தி உள்ளனர்  .

கி.பி 15ம் நூற்றாண்டு ,

விஜயநகர காலத்து கல்வெட்டு ஒன்று  கற்படுக்கையின் மீது வெட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்னும் ஊர் பெயர் இடம் பெற்றுள்ளது . தற்போது இங்கு உள்ள  குகையின் ஒருபுறம் முருகன் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .


    












  .

Friday, May 6, 2022

மறுகால்தலை பிராமி கல்வெட்டு , திருநெல்வேலி

 சமண மதம் தமிழகத்தில் நீண்ட வரலாற்றை கொண்டது என்பதற்கு இங்கு பரவிக் கிடக்கும் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகள் மற்றும் சமண சிற்பங்களுமே சாட்சி .  சமண துறவிகள் , இயற்கையாக அமைந்த மலை குகைகளில் கற்படுக்கைகளை அமைத்துத் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்  . இவ்வாறான கற்படுக்கைகள் தமிழகத்தில்  அரச்சலூர் , சுக்காளியூர் , கீழ வளவு , அழகர் மலை மற்றும் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கிறது  .   இக்கற்படுக்கையின் அருகே சில இடங்களில் கல்வெட்டுகளை பொறித்தும் உள்ளனர் . இவ்வாறு கல்வெட்டுகளுடன் கூடிய கற்படுக்கை திருநெல்வேலி மாவட்டம் மறுகால்தலை என்னும் ஊரில் உள்ளதைப் பற்றி காண்போம் .

                   திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9km தொலைவில் உள்ளது சீவலப்பேரி என்னும் ஊர் . பராந்தக வீர நாராயணன்  தன் தந்தை ஸ்ரீ வல்லப பாண்டியன் நினைவாக ஒரு பெரிய ஏரியை வெட்டி அதற்கு "ஸ்ரீ வல்லப பேரேரி " என்று பெயரிட்டான் . அதுவே பின்னாளில் மருவி "சீவலப்பேரி" என்று ஆனது . இந்த சீவலப்பேரி ஊரில் இருந்து 2 km தொலைவில் உள்ளது மறுகால்தலை என்னும் கிராமம் . குளம் நிரப்பி மறு கால் பாயும்  முதன்மையான இடம் (தலை) என்பதே "மறுகால்தலை "  என்றானதாக கூறப்படுகிறது .


 தாமிரபரணி , கடனாநதி , சிற்றாறு  ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகே இணைகின்றன .  இவ்வூரின் பாதை முன்னோரு காலத்தில்  திருநெல்வேலியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக இருந்துள்ளது . இவ்வூரில் உள்ள பூவிலுடையார் மலையில் உள்ள சிறு குன்றில் பஞ்சபாண்டவர் கற்படுக்கை என்று அழைக்கப்படும் கற்படுக்கை அமைந்துள்ளது . இக்குகையின் மேற்பகுதியில் பெரிய அளவிலான எழுதுக்களால் வெட்டப்பட்ட பிராமி கல்வெட்டுகள் உள்ளன . இதன் காலம் 2ம் நூற்றாண்டு . தமிழகத்தில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று .

கல்வெட்டு :

" வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் " 

செய்தி : வெண்காசிபன்  என்பவன் இங்குள்ள குகைதளத்தில் கல்படுக்கை அமைத்து கொடுத்தான்  என்பது கல்வெட்டுச் செய்தி ஆகும் . கற்படுக்கையை கஞ்சனம் என்பர் . 


இக்கல்வெட்டு எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் மேலும் கீழுமாக பெரிய அளவிளான எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளது . அளவில் பெரிய எழுத்துக்களாக உள்ளதால் கீழ்லிருந்தே படிக்க முடிகிறது . 

இயற்கையாக அமைந்த இக்குகையில் மழை நீர் குகைகளில் விழாதவாறு கூரை விளிம்பை குடைந்து உள்ளனர் . சீவலப்பேரி செல்லும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு இடமாகும்.








Friday, March 5, 2021

சமணக்கோவில், பூந்துறை , ஈரோடு மாவட்டம்

கொங்கு நாட்டின் 24 நாடுகளில் முதன்மையான நாடான "பழம்பூந்துறை" நாட்டின் தலைநகர் பூந்துறை  . இங்கு 13ம் நூற்றாண்டை சேர்ந்த திகம்பர சமண கோயில் உள்ளது .இங்கு பார்சுவநாதர் மற்றும் இயக்கி பத்மாவதியின் உருவ சிலையும் உள்ளது . பார்சுவநாதர் சமணச் சிற்பத்தின் மேல் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். மேலும் பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிதாக முழுவதும் சலவைக் கற்களாலான கோவில் கட்டப்பட்டுள்ளது .






Tuesday, February 9, 2021

ஆறுநாட்டார்மலை , கரூர்

 கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் எனும் ஊரில் உள்ளது ஆறுநாட்டார்மலை. இம்மலை உச்சியில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இதே மலையின் மேல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளிலும் குகையின் விளிம்பிகளிலும்தான் கரூரின் தொன்மைக் கல்வெட்டுக்கள் உள்ளன. 

கல்வெட்டு 1

  ......தா அ ம ண ண ன யா ற றூ செ ங கா 

ய ப ன உ றை ய

கோ ஆ த ன செ ல லி ரு ம பொ றை ம க ன 

பெ ரு ங க டு ங கோ ன ம க ன.ன ங்

க டு ங கோ ள ங கோ ஆ சி அ று த த க ல


மேற்கண்ட இந்த கல்வெட்டானது மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. 

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ, இவரது மகன் இளங்கடுங்கோ என்பவர் இந்த படுகையை அமைத்துக் கொடுத்ததாக செய்தி. 

சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இம்மூன்று சேர அரசர்களையும் இங்குள்ள  கல்வெட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு. 

கல்வெட்டு ; 2

யா ற றூ செ ங கா ய ப ன ..ற றி ட

டா ட டா ன ம 

என்ற கல்வெட்டு வாசகத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. 


மேலும் யாற்றூரைச் (தற்போதைய ஆத்தூராக இருக்கலாம்) சேர்ந்த  செங்காயபன் என்பவர் சமணத் துறவியாக மாறியதன் பொருட்டு அவருக்கு செய்து கொடுத்த படுக்கை இதுவாகும். மூத்த அமணன் என்று குறிப்பிடப்படுவதால் அங்கிருக்கும் துறவிகளுக்கு தலைமை துறவியாக இருக்கலாம்.

மேலும் இவரது படுக்கையை குறிக்கும் வகையில் துறவியின் பெயர் படுக்கையிலும் உள்ளது.


கல்வெட்டு 3

(சு) ண ண வா ண ணி க ன

வே ள ஆ த ன அ தி ட டா ன ம


மேற்குறிப்பிட்ட இந்த கல்வெட்டு வாசகமும் ஒரு துறவியின் படுக்கையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த துறவி ஒரு சுண்ணாம்பு வணிகராக இருந்தவர் என்பதையும், கரூரில் சுண்ணாம்பு வாணிகம் நடந்திருந்தமையும் இந்த கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.


கல்வெட்டு 4

கருஊர பொன வாணிகன

நநதி அதிடடானம


இந்த கல்வெட்டானது கரூரைச் சார்ந்த பொன் வாணிகன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளமையால் கரூரில் பொன் வேலைப்பாடுகளும் பொன் சார்ந்த வாணிகமும் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.


கல்வெட்டு 5

ந ம பி ஊ ர அ பி ட ன கு று ம ம க ள

கீ ர ன னே றி செ யி பி த ப ளி


மேற்கண்ட இந்த கல்வெட்டில் வரும் பிட்டன் குறுமகள் என்ற வாசகத்தின் மூலம் பெண்துறவிகளும் இங்கு இருந்தமையை அறிய முடிகிறது.


மேற்கண்ட இந்த கல்வெட்டுக்கள் யாவும் தொன்மைத்தமிழ் பிராமி எழுத்துக்களால் கிமு2ம் நூற்றாண்டு முதல் கிபி2ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவை என்று அறிஞர்களால் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சேரநாட்டின் தலைநகராக விளங்கிய வஞ்சிமாநகர் என்றழைக்கப்படும் கரூரின் தொன்மையையும் சிறப்பையும் அறியலாம்.