Showing posts with label பாறை ஓவியங்கள். Show all posts
Showing posts with label பாறை ஓவியங்கள். Show all posts

Tuesday, September 3, 2019

பாறைஓவியம் ,கரிக்கையூர், கோத்தகிரி

தொல்பழங்கால மக்களின் வாழ்விடங்களில் காணப்படும் தொன்மையான அடையாளங்களாக பாறை ஓவியங்களை கூறலாம்.  இவை தனிமனிதனின் எச்சங்களாக இல்லாமல் ஓர் குழு அல்லது இனத்தின் பண்பாடு மற்றும் வாழ்க்கையை குறிப்பது போலவே அமைந்துள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஓவியங்கள் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் , வேட்டையாடுதல் , கால்நடை வளர்த்தல் போன்றவற்றை சார்ந்தே உள்ளன . பாறை ஓவியங்கள் பொதுவாக வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்பட்டாலும் சிவப்பு , வெள்ளை  நிறங்களிலேயே பெரும்பாலான ஓவியங்கள் உள்ளன . 

 கோத்தகிரி அடுத்து உள்ள சோலூர் மட்டம் அருகில் உள்ள கரிக்ககையூரில் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ளன . இந்தியாவில் உள்ள பெரிய பாறை ஓவியத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று . இங்கு ஒரு பெரிய குகை அமைப்பில் உள்ள பாறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன . இங்கிருந்து பார்த்தால் சுமார் 10 - 20 கிலோமீட்டர் தூரத்தை பார்க்க முடிகிறது . இங்கு இருந்து பார்த்தால் பவானி சாகர் அணையின் நீர் தெரிகிறது .  இங்கு  200க்கு மேற்பட்ட வெவ்வேறு காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன . இவை செந்நிறம் மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது . இவை சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது .

 இங்கு பல விலங்குகளின் ஓவியங்கள் , போர் காட்சி , நடனக்காட்சி , மனித உறவுகளை மையப்படுத்திய ஓவியங்கள் என பல ஓவியங்கள் உள்ளன . சில விலங்குகளை பக்கவாட்டிலும்,  சில விலங்குகளை நேர்கோட்டில் வரைந்துள்ளனர் . கற்கால மனிதனின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் இவ்வோவியங்கள் மூலம் நாம் அறிய  முடிகிறது .












எடக்கல் குகை கீரல் ஓவியங்கள், edakkalcaves , petroglyps

கேரளா மாநிலம் , வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எடக்கல் . இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது . மேலே செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய நல்ல பாதை அமைப்பு உள்ளது. "எடக்கல்" என்பதற்கு "இடையில் ஒரு கல்" என்பது பொருள் . இடைக்கல் என்பது இடக்கல் என்றாகி பின்பு எடக்கல் என்று மறுவியுள்ளது.
இயற்கையாக அமைந்த இக்குகையில் வாழ்ந்த தொல்பழங்கால மனிதன் தன் வாழ்க்கை முறையையும், தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளான் . பாறைகளில் வண்ணங்களில் ஓவியங்கள் வரைவதற்கு முன் ஆதி மனிதன் பாறைகளில் ஓவியங்களை செதுக்கி தன் சுவடுகளை பதித்து உள்ளான் . கற்கருவிகளால்
கற்கால மனிதர்கள் செதுக்கியதே "கீறல் ஓவியங்கள்' (petroglyps ) ஆகும் . இத்தகைய ஓவியங்கள் உலகெங்கும் காணப்படுகிறது . இந்தியாவில் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் காணப்படுகிறது.
இங்கு உள்ள மலையில் இரண்டு குகைகள் காணப்படுகின்றன அவை ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது.மேல் குகை , இரண்டு பெரிய பாறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . மேல் குகையின் நேர்கீழே அடுக்குமாடி போன்ற அமைப்பில் கீழ்க்குகை அமைந்துள்ளது .சுமை காரணமாக சரிந்து போகக்கூடும் என்பதால்,
மேல் குகையில் ஒரே நேரத்தில் அதிக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை . கீழ் குகை பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது .இங்கு பெட்ரோகிளிஃப்கள் இல்லை .
1890ம் ஆண்டு இந்த எடக்கல் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் காவல்துறை அதிகாரியான Fred Fawcett என்பவர் ஆவார்.
இங்கு உள்ள கீறல் சிற்பங்களில் மனித மற்றும் விலங்கு புள்ளிவிவரங்கள், மனிதர்களால் பயன்படுத்தப்படும் கருவிகள் ,
சடங்கு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளன. அனைத்து மனித வடிவங்களும் தலைக்கவசம் அணிந்திருப்பதைக் காணலாம். யானைகள், வேட்டைக்காரர்கள் மற்றும் மான்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இவை தவிர சக்கரங்களுடன் வண்டிகள் பல காணப்படுகிறது . இவை சுமார் 8000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது.
மேலும் இங்கு ஒரு தமிழ்-பிராமி கல்வெட்டும் உள்ளது . இந்த இடத்தை கேரளா அரசாங்கம் நல்ல முறையில் பாதுகாத்து வருகிறது .